சனி, 23 அக்டோபர், 2021

கொடுமணல் - அந்துவன் ஆதன்

பாரதத்தின் பழழையான கல்வெட்டில் அந்துவன் என்கிற பெயர் பயின்று வந்துள்ளதை - ஆநிரை கொள்ளும் பூசலில் இறந்துபட்ட வீரனுக்கான நடுகல் பொறிப்பில்  'அதியன் அந்துவன்' என்கிற பெயர் பயின்று வந்துள்ளமை கொண்டு கண்டோம்.

அவ்வாய்வினோடு ஒத்த சிறப்புடையதாகவும் நமக்கு இன்னும் நெருக்கமானதாகவும் மற்றுமொரு தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்பு கொங்கு நாட்டில் கிடைத்துள்ளது. 'அந்துவன்' என்கிற நமது குடிப் பெயர் அதில் பயின்று வந்துள்ளது என்பது நமக்கு நம் பழமையை பறைசாற்றும் பெருமைக்குரிய செய்தியாகும்.

கீழடி, ஆதிச்சநல்லூர் எல்லாம் ஊடகங்களில் பிரபலமாகும் முன்னரே மிக அமைதியாக தன் முத்திரையை பதித்த தொல் ஆய்வுக்களம் கொடுமணல்.  அமராவதி, காவிரி, வைகை என்னும் ஆற்றுவெளி நாகரிகங்களுக்கு இணையானது நொய்யல் ஆற்றுவெளி நாகரிகம். கொங்கு நாட்டின் சிறப்பை பழமையை பறைசாற்றும் களம் கொடுமணல் என்பது ஆய்வாளர் நிறுவிய கருத்து.

உலகத்திலேயே மிகவும் பழமையான 2500 ஆண்டுகளுக்கும் மேலான எஃகு ஆயுதக் கலங்கள் உற்பத்தி செய்து கொடுத்த அதிநவீன அமைப்புகளின் எச்சங்களை இன்றும் கொடுமணலில் காணலாம். இப்பகுதியில் பல பழமையான தொல்பொருள்கள் கிடைத்துள்ளன. இந்தியாவிலேயே மிக அதிகமாக இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட கிரேக்க ரோமாணியக் காசுகள் கிடைக்கும் ஒரே இடம், இரத்தினமணிகள், எஃகு ஆயுதங்கள், செப்புச் சிலைகள், ஒப்பனை வளையல்கள், பாசிகள், சிப்பி, கிளிஞ்சல்கள், பானைகள், ஈமச் சின்னங்கள் அதிகம் கிடைத்துள்ளது இந்த நொய்யல் ஆற்றங்கரைப் பகுதியில் தான். மேற்குலக நாடுகளோடு கடல்வழி வாணிபத்தில் தொடர்பில் இருந்த தென்னகத்தின் பிரதானமான வணிக நகரங்கள் நொய்யல், அமராவதி நதி வழியே கொங்கு நாட்டில் சிறந்து விளங்கி நாட்டின் வளத்தைப் பெருக்கின.

கொடுமணல் இன்றும் கொங்கு நாட்டு வேளாளர்களில் சேரன், பாண்டியன், பனங்காடன் என்னும் கோத்திரத்தார்க்கு காணியாக விளங்கும் ஊராகும். கீரனூர் மடத்தைச் சேர்ந்த நமது அந்துவன் உள்ளிட்ட ஆறுகுலத்தாரின் குலகுருக்களே இவர்களுக்கும் குல குருக்களாக விளங்கி வருகின்றனர் என்பது கொடுமணலுக்கு முடிச்சுப் போடும் சிறு இழை.

கொடுமணலில் பழந்தமிழ் பொறிப்புகளோடு கூடிய பல்வேறு பானை ஓடுகள் உடைந்த நிலையில் கிடைத்துள்ளன. அவற்றில் அக்கால மக்களின் பெயர்கள் பல பொறிக்கப்பட்டுள்ளன. இதில் வரலாற்றுச் சிறப்புக்குரிய விஷயம் கொங்கு வேளாளர்களில் பெரும்பான்மையான கூட்டம் என்னும் கோத்திரம்/குடிப் பெயர்கள் இப்பானை ஓடுகளில் பயின்று வந்துள்ளது தான்.

பெயருக்கு முன் ஊர்ப் பெயரும், தந்தை பெயர் அல்லது குடியின் பெயரைச் சேர்த்தும், தொடர்ந்து தன் இயற் பெயரும், பெயருக்குப் பின் தன் சிறப்புப் பட்டப் பெயர்களைச் சேர்த்தும் குறித்துக் கொள்வது பழந்தமிழர் வழக்கமாகும்.

ஆதன்‌, அந்துவன்‌, சாத்தந்தை, பண்ணன்‌, மணியன்‌, வண்ணக்கன்‌ என்ற பெயர்கள் கொடுமணல் பானை ஓடுகளில் காணப்படுகின்றன. இவை கொங்கு வேளாளர்களின் கூட்டப் பெயர்கள் ஆகும். இத்தகைய பழமையான சங்க கால தமிழ்ப் பெயர்களைக் தமது குடிப் பெயராகக் கொண்டிருக்கும் ஒரு பழந்தமிழ்ச் சமூகம் கொங்கு வேளாளர் சமூகம் என்பதற்கு இவை சான்றாகும்.

அவ்வகையில் இப்பானைப் பொறிப்புகளில் பலவும் இரண்டு பெயர்களாக குடிப் பெயரும் - இயற்பெயரும் என்ற அமைப்பில் வந்துள்ளது நோக்கலாம். அதில் ஒன்று தான் "அந்துவன் ஆதன்" எனப் பயின்று வந்துள்ள இப்பானையோட்டுப் பொறிப்பு. இதன் காலம் இற்றைக்கு 2500 ஆண்டு காலம் முந்தியது.

மூலம் : பண்டைக் குறியீடுகளும் எழுத்துகளும் - கா.ராஜன் - பக்கம் 17
படம் : கொடுமணலில் தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புகள்
- https://www.kngac.ac.in/elearning-portal/ec/admin/contents/3_18K5TELT1_2020101607104197.pdf

அந்துவன் என்ற குடியில் வந்த ஆதன் என்பவரையோ, அந்துவன் என்ற தந்தையின் மகனான ஆதன் என்பவரையோ இப்பொறிப்பு சுட்டுகிறது.

'அந்துவன் சேரல்'  (கரூர் வஞ்சி நகரை ஆண்ட சங்ககால 'இரும்பொறை' என்னும் சேர அரச பரம்பரை முதல்வன்)

'அந்துவன் சாத்தன்' (ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் ஐந்து நண்பர்களில் ஒருவராகவும் அமைச்சராகவும் விளங்கியவர்)

'அந்துவன் கீரன்' (சங்க காலக் குறுநிலமன்னன்)

'அந்துவன் செள்ளை' (இளஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னனின் தாய்)

'அந்துவன் பெற்றான்' (கொங்கு மண்டல சதகம் சொல்லும் அந்துவன் குல கொங்க வேளாளர்)

- என்கிற பெயர் பிரயோகங்களோடு இது ஒப்பிடத்தக்கது சிறப்புக்குரியதாகும்.

அந்துவன் செல்லும் இடமெல்லாம் அரசாள்வான் என்ற நம் குலப் பெண்கள் பெற்ற வரமும், நமது குலதெய்வமான செல்லாண்டியம்மன் தெய்வீக அருளும், உமையொருபாகனின் சித்தமும் இப்பெருமைகளை பேணும் வகையில் நம்மை அன்றும், இன்றும் போல என்றும் நல்வழிநடத்தி ஆள வேண்டுகிறேன். சிவ சிவா!

- அந்துவன் தனேஷ்



செவ்வாய், 20 ஜூலை, 2021

அந்துவன் மகாதேவி

சேரர் வரலாற்றில் அவர்களது தலைநகரம் எது? அவர்கள் எத்தனை கிளையினர்? அவர்களின் வழித்தோன்றல்கள் யார்? என்ற கேள்விகள் எழாத ஆய்வாளர்களே இருக்க முடியாது.

இன்று கொங்கு மண்டலம் என அறியப்படும் மேற்கு தமிழகமே சேரனின் நாடு தான். கொங்கன் என்றும், கொல்லிப் பொறையன் என்றும், அமரவாதி என்னும் ஆண்பொருநை ஆற்றுக்கு உரியவன் என்றும் அறியப்படுபவர்கள் சேரர்கள் என்பதால் சேரனின் மையமாக விளங்கியதே கொங்கு நாடு தான் என்பது விளங்கும்.

வஞ்சி நகரம் நான்கு என்று கொங்கு நாட்டு ஆவணங்கள் கூறுகின்றன. அவற்றில் இந்த அமராவதி ஆற்றங் கரையில் தான் கரூவூர், தாராபுரம், மூலனூர் என்ற மூன்று வஞ்சி நகரங்கள் இருக்கின்றன.

சேரன்/சேரலன், அந்துவன், ஆதன், மலையன், பவளன், வில்லி, ஆந்தை, பனையன் என்கிற கொங்கு நாட்டு வேளாளர்களின் கோத்திரங்கள் சேர அரச வரலாற்றில் நெருங்கிய தொடர்புடைய கோத்திரங்கள் ஆகும்.

கம்பர் காலத்தில் குலோத்துங்கனோடு ஏற்பட்ட முரண்பாட்டால் வேளாளர்கள் கொங்கிற்குள் குடியேறும் முன்னரும் இங்கு வேளாளர்கள் இருந்தார்கள் என்பதற்கு சேரர் மரபினோடு வந்த இக்கோத்திரத்தாரும் அவர்களின் வரலாறுகளுமே சான்றாதாரமமாக விளங்குகின்றன.

இவர்களில் அந்துவன் கூட்டத்தினர் பழம் வஞ்சியான கரூர் பகுதியில் காணியாளர்களாக இன்றும் பெருவாரியாக வாழ்ந்து வருகின்றனர். "வஞ்சி வேள்" என்னும் பட்டம் கொண்டிருக்கும் இவர்கள் அந்துவஞ்சேரல் என்பானின் வழியினரே என்பதைப் பலவழிகளிலும் காட்டுகிறது.

கரூர் "தென்னவன் வஞ்சி வேளான  இரவி குவாவன்", ஈரோடு கொல்லம்பாளையாம் "தென்னவன் பேரரையனான வஞ்சி வேள் தாழி" என்னும் கல்வெட்டுகளால் இவர்கள் ஒன்பதாம் நூற்றாண்டு அளவில் வீரகேரளரின்(சேரன் கூட்டத்தார்) சமகாலத்தில் கரூரைத் தலைமையாகக் கொண்டு தனி அரசாக விளங்கி வந்துள்ளனர் என்பது விளங்கும்.

மேலும் இவர்களை "வஞ்சி வ்ருஷ்ணி" என்று சம்ஸ்கிருத க்ரந்தப் பகுதியில் குறிப்பிட்டிருப்பது மிகச் சிறப்பானதொரு வரலாற்றுக் குறிப்பாகும்.

தற்சமயம் நமக்கு கிடைத்திருக்கும் மற்றுமொரு சிறப்பானதொரு கல்வெட்டுக் குறிப்பைப் பற்றியதே இப்பதிவு.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிப் பகுதியில், மணமேல்குடி என்னும் ஊரில் பொ.ஆ. 1210 , குலசேகர பாண்டியன் ஆட்சியில் பொறிக்கப்பட்டதாகக் கிடைத்திருக்கும் இக்கல்வெட்டில் புதிய தகவல் ஒன்றும் கிடைத்துள்ளது.

நானாதேசி விண்ணகர் தெற்கு மற்றும் வடக்கு மணமேல்க்குடி நகரத்தாரும் - "அந்துவன் மகாதேவி" சதுர்வேதிமங்கலத்துச் சபையோரும் சேர்ந்து மணமேல்குடி பொன்னகர் பெருமாள் கோயிலிற்காக அளித்த கொடை பற்றிய செய்தியை கல்வெட்டு விளம்புகிறது.


"அந்துவன் மகாதேவி" எனும் அரசியாரின் பெயரில் இக்கல்வெட்டின் காலத்திற்கு பலகாலம் முன்னரே இந்த சதுர்வேதிமங்கலம் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்திருக்க வேண்டும். உருவாக்கியோரின் காலமும், யார் ஆட்சியில் உருவாக்கப்பட்டது என்பதும் நமக்கு அறிய கிடைக்கவில்லை.

அரசியாரின் பெயரில் உள்ள "அந்துவன்" என்கிற முன்னொட்டு அவர் சேர அரச வம்சமான அந்துவர் வழியில் உதித்தவள் என்பதாகவோ, அல்லது சேர அரசர் வழிவந்த அந்துவன் கோத்திர அரசனொருவனுக்கு வாக்கப்பட்டதாகவோ குறித்திருக்கலாம்.

இதே போல, சங்க காலத்தில் மையூர் கிழான் மகள் "அந்துவன் செள்ளை" என்பவரும் குறிக்கப்பட்டுள்ளது அறியக் கிடைக்கிறோம். இவர் குட்டுவன் இரும்பொறையின் மனைவியாரும் இளஞ்சேரல் இரும்பொறையின் தாயாரும் ஆவார் என்பதும் அறிவோம். அவரது பெயருக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் அந்துவனின் தாய் என்பதாகக் குறிப்பதே பல்லாற்றானும் பொருத்தமாகவுள்ளது. 

இந்த இரும்பொறை வம்சம் யார் என்று கேட்டால் - வஞ்சி முற்றத்துத் துஞ்சிய நெடுநுண் கேள்வி "அந்துவஞ்சேரல் இரும்பொறை" மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன் மகன் பெருஞ்சேரல் இரும்பொறை மகன் இளஞ்சேரல் இரும்பொறை, இவர்களோடு மாந்தரஞ்சேரல் இரும்பொறை என விரிகிறது. இது பற்றி தனி பதிவாகப் பார்ப்பாம்.

ஆக "அந்துவன் மகாதேவி" என்னும் நமது நமது அரசியாரின் புகழ் சொல்லும் பெயர் அமைந்த மணமேல்குடி கல்வெட்டு கொங்கு வெள்ளாள வஞ்சி வேளார் வழி வந்த அந்துவன் கூட்டத்தார் ஒவ்வொருவருக்கும் தம் நெடிய அரச பாரம்பரியத்தை நினைவுறுத்தும் மற்றுமொரு சிறப்பாக என்றென்றும் அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை!

- அந்துவன் தனெஷ்

#கொங்கர் #அந்துவர் #வஞ்சிவேளிர் #வஞ்சிவ்ருஷ்ணி #வேளாளர் #அந்துவஞ்சேரல் #அந்துவன்செள்ளை #அந்துவன்மகாதேவி

திங்கள், 1 பிப்ரவரி, 2021

வஞ்சி வேள் - அந்துவன்! பதிவு #2 - “வஞ்சி வ்ருஷ்ணி எனும் வஞ்சி வேள்”

தென்னகத்தை ஆண்ட மூன்று பெரும் வேந்தர்கள் சேரர், சோழர், பாண்டியர். இமயத்தில் முதன் முதலில் தமது அரசு சின்னமான வில்லைப் பொறித்த பெருமைக்கும் குமரி முதல் இமயம் வரை ஒரு மொழி வைத்து பாரதத்தை ஆண்ட சிறப்புக்கும் உரியவர்கள் சேரர்கள்.

சேர அரசர்கள் பல கிளையினர் என்றும் அவர்களில் இருபெரும் கிளையினரில் மேலை மலை நாட்டை ஆண்ட சேரர்கள் உதியன் மரபினர் என்றும்  கீழைக் கொங்கு நாட்டை ஆண்ட சேரர்கள் அந்துவன் மரபினர் என்றும் அறிஞர் கூறுவர்.

உதியன் மரபினர் வீரகேரளர் என்றும் அந்துவன் மரபினர் இரும்பொறையர், வஞ்சி வேளிர் என்றும் அறியப்படலாயினர். தற்காலத்தில் இவ்வீரகேரள மரபினர் சேரன்/சேரலன் கூட்டம் என்றும் பொறையர்/வஞ்சி வேளிர் மரபினர் அந்துவன் கூட்டம் என்றும் காணியாளராகி குடி பெருகி கொங்க வேளாளரில் தனிக் கோத்திரங்களாக விளங்கி வருகின்றனர்.

இதுவரை ‘வஞ்சி வேள்’ என்னும் பட்டம் கொண்ட இச்சேர மரபினரின் கல்வெட்டுகள் பல தமிழகத்தில் கிடைத்துள்ளன. அவற்றுள் கொங்கராகிய சேரர்களின் தலைநகரிலேயே கிடைக்கப்பட்ட கல்வெட்டுகள் மிகவும் முக்கியமானது.

பதிவு #1 -இல் (https://andhuvan.blogspot.com/2019/12/blog-post.html) கொடும்பாளூர் இருக்கு வேள் மரபினர் வீழ்த்திய வஞ்சி வேள் என்ற சேர அரசனைபற்றியும் கொங்க வேளாள வஞ்சி வேள் அந்துவர் மரபினையும் பற்றிய இரு கல்வெட்டுக்களைப் பார்த்தோம்.

இந்த வஞ்சி வேளிர் பெருமை பற்றி சொல்லும் மற்றொரு முக்கியமான கல்வெட்டு பற்றிய பதிவு இது!

கல்வெட்டின் காலம்: 9 ஆம் நூற்றாண்டு

அரசன்: தென்னவன் வஞ்சி வேள் இரவி குவாவன் (சேரன்)

கல்வெட்டு:

“ஸ்ரீ தென்னவன் வஞ்சி வேளாஇன-

இரவி குவாவன் மணவாட்டி

நிறந்தேவி வஞ்சி வேளார்க்கேய்

ஐம்பது பொன் குடுத்துப் பு-

துப் பெருவாய்க் கீழக்குடையூர் மு-

ருகத்தரைக் கடறு சாற்றிய காற்செய்யு-

ம் விலைக்குக் கொண்டிவ்வூர்த் திருமூ-

லட்டானத்து மாதேவர்க்கு ஒரு நொந்தாவி-

ளக்கினுக்கும் திருவமிர்தினுக்குமாகக் கு-

டுத்தாள் நிறந்தேவி பந்மாஹேஸ்வர காவல்

பாத3 நிவர்த்தநஸ்யாதா3 ச்ச2 த்ரக்3 ரா மே பி

நாகிநே வஞ்சிவ்ரிஷ்ணேகு3 ஹா4 ப4 ஸ்ய தே3-

வி தே3வீதி கீர்த்திதா ஸ்வஸ்தி”

விளக்கம்:

கருவூரில் கீழக்குடையூர் என்னும் ஊரின் திருமூலட்டானத்து மகாதேவர்க்கு நந்தா விளக்கு எரிக்கவும், திருஅமுது படைக்கவும் வஞ்சி வேளின் மனைவி நிறந்தேவியார் விலைக்கு நிலம் வாங்கிக் கொடுத்த செய்தியைக் கூறுகிறது இக்கல்வெட்டு.

துணை: ஆவணம் இதழ்-18, 2007, பகுதி 11-4, பக்கம் 31-32

கல்வெட்டின் சிறப்பு:

கல்வெட்டு தமிழ் மற்றும் சம்ஸ்கிருதத்தில் இருமொழிக் கல்வெட்டாய் அமைந்திருப்பது சிறப்பாகும்.

மேலும் ‘வேள்’ என்னும் தமிழ் சொல்லுக்கு இணையாக சம்ஸ்க்ருதத்தில் 'வ்ருஷ்ணி' என்று குறித்திருப்பது தனிச் சிறப்பு உடையதாகும்.

இக்குறிப்பு நமக்கு இரண்டு செய்திகளை விளக்குவதாக இருக்கலாம்.

1) ‘வ்ருஷ்ணி’ என்பதற்கு வடமொழியில் ஆண்மை மிக்கவன் என்று பொருள்படும். வேள் (ஒளிபொருந்தியவன்) என்னும் சொல்லுக்கு இணையாக இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது சரியே. அரச நிலையைக் குறிக்க இவ்விரு சொற்களும் பயன்பட்டுள்ளதாக அறியலாம்.

2) ‘வ்ருஷ்ணி’ என்பது மாயோன் ஆகிய திருமால் அவதாரம் செய்த யது குல வம்சத்தின் ஒரு கிளையின் பெயரும் ஆகும்.

துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் பதினெண்குடி வேளிரையும் அருவாளரையும் கொண்டு போந்து”

- நச்சினார்க்கினியர் (தொல்காப்பியம் பாயிர உரை)

‘‘இது மலயமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும் வேந்தன் தொழில் உரித்தென்கிறது.’’

- நச்சினார்க்கினியர் (தொல்காப்பியம், அகத்திணை 32 ஆம் சூத்திர உரை)

மேற்காட்டிய நச்சினார்க்கினியர் உரை வழி நோக்கின் ‘வ்ருஷ்ணி’ என்பது கண்ணபிரான் வழி வந்த வேளிர் வம்சம் என்ற பொருளும் தொக்கி வருவது அருஞ்சிறப்பாகும்.

இதற்கு வலு சேர்க்கும் விதம் சேரனைப் பற்றிய பழங்கதைகள் சேரனை ஆநிறைச் செல்வங்களுக்கு உரியவனாகச் சிறப்பிக்கப் படுவது உற்றுநோக்குதற்கு உரியதாகும்.

“சேர நாடு வேழம் உடைத்து”

“சோழ நாடு சோறு உடைத்து”

“பாண்டி நாடு முத்து உடைத்து”

“தொண்டை நாடு சான்றோர் உடைத்து”

என்னும் வரிசையில் “கொங்கு நாடு ஆ உடைத்து” என்று மொழிவர் சான்றோர்.

“ஆகெழு கொங்கர்” (பதிற்றுப்பத்து - 28), “கொங்கர் ஆபரந்தன்ன” (பதிற்றுப்பத்து - 77) என்னும் சங்கப் பாடல்களும் இச்சிறப்பை எடுத்து இயம்புகின்றன.

தற்காலத்திலும் கொங்க மாடுகள் / கங்க மாடுகள் என்னும் காங்கேய நாட்டு மாடுகள் உலக அளவில் தம் அழகிற்கும், வலிமைக்கும் பிரசித்தி பெற்றவை என்பது ஒப்ப நோக்கத்தக்கது.

"சோழன் பூர்வ பட்டையம்" என்னும் பழஞ்சுவடிச் செய்தி ஒருபடி மேலே போய் “இலாட வளநாட்டில் நந்தகோபால பாடியில் உலாச் சேரன் பிறந்தான்” என்று அறிவிக்கிறது.


 
புலிமான் கோம்பையில் கிடைத்த காலத்தால் பாரதத்தின் மிகப்பழமையானதும் முதன்மையாந்துமான பிராமிக் கல்வெட்டு ஆகோளில் இறந்து பட்ட “கல்பேறு அதியன் அந்துவன்”. (கல்பேறு - ஆநிரை பேறு) என்று பசுச் செல்வம் மிக்க அந்துவன் ஒருவனைக் குறிப்பதை மற்றொரு பதிவில் (https://andhuvan.blogspot.com/2020/02/blog-post.html) பார்த்தோம்.


மேலும் கோயமுத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே கடத்தூரில் மருதீசர் கோயிலில் கிடைக்கும் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய கல்வெட்டு ஒன்றும் “கடத்தூர் மன்றாடி வஞ்சி வேள்” என்பவன் தூண் செய்து அளித்தது பற்றிக் கூறுகிறது. மன்றாடி என்பது ஆநிறை ஓம்பும் சமூகத்தில் உண்டான ஆட்சி அரச பொறுப்பு என்பது அறிஞர்கள் கூற்று.




இச்செய்திகள் எல்லாம் கொங்கு நாட்டைத் தலைமையாகக் கொண்டு ஆண்ட வஞ்சி வேளிர்களான சேர மரபினர் ஆநிறைச் செல்வம் மிக்கவர்கள், கண்ண பிரான் வழிவந்த வ்ருஷ்ணி குலத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் அதன் வழியே கொங்க வேளாள அந்துவர்களின் வரலாறு மிகவும் அரியதொரு தொடர் இழையைக் கொண்டது  என்பதும் ஒருவாறு ஊர்ஜிதம் ஆகிறது.

நன்றி: ஜெய்வந்த் (ஆவணம் இதழ் சுட்டியதற்கு)

"நன்றே நம்பிக் குடிவாழ்க்கை நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா!"

- அந்துவன் தனேஷ்

யது குல சேரர் (எனும்) வஞ்சி வேள் அந்துவர்

௳ தமிழகத்தின் மூவேந்தர்களான சேர சோழ பாண்டியரை முறையே அக்னி வம்ச, சூரிய வம்ச, சந்திர வம்சம் என்று சொல்வதுண்டு. இதில் சேரர்களை அக்னி வம்சம் என...