பாரதத்தின் பழழையான கல்வெட்டில் அந்துவன் என்கிற பெயர் பயின்று வந்துள்ளதை - ஆநிரை கொள்ளும் பூசலில் இறந்துபட்ட வீரனுக்கான நடுகல் பொறிப்பில் 'அதியன் அந்துவன்' என்கிற பெயர் பயின்று வந்துள்ளமை கொண்டு கண்டோம்.
அவ்வாய்வினோடு ஒத்த சிறப்புடையதாகவும் நமக்கு இன்னும் நெருக்கமானதாகவும் மற்றுமொரு தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்பு கொங்கு நாட்டில் கிடைத்துள்ளது. 'அந்துவன்' என்கிற நமது குடிப் பெயர் அதில் பயின்று வந்துள்ளது என்பது நமக்கு நம் பழமையை பறைசாற்றும் பெருமைக்குரிய செய்தியாகும்.
கீழடி, ஆதிச்சநல்லூர் எல்லாம் ஊடகங்களில் பிரபலமாகும் முன்னரே மிக அமைதியாக தன் முத்திரையை பதித்த தொல் ஆய்வுக்களம் கொடுமணல். அமராவதி, காவிரி, வைகை என்னும் ஆற்றுவெளி நாகரிகங்களுக்கு இணையானது நொய்யல் ஆற்றுவெளி நாகரிகம். கொங்கு நாட்டின் சிறப்பை பழமையை பறைசாற்றும் களம் கொடுமணல் என்பது ஆய்வாளர் நிறுவிய கருத்து.
உலகத்திலேயே மிகவும் பழமையான 2500 ஆண்டுகளுக்கும் மேலான எஃகு ஆயுதக் கலங்கள் உற்பத்தி செய்து கொடுத்த அதிநவீன அமைப்புகளின் எச்சங்களை இன்றும் கொடுமணலில் காணலாம். இப்பகுதியில் பல பழமையான தொல்பொருள்கள் கிடைத்துள்ளன. இந்தியாவிலேயே மிக அதிகமாக இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட கிரேக்க ரோமாணியக் காசுகள் கிடைக்கும் ஒரே இடம், இரத்தினமணிகள், எஃகு ஆயுதங்கள், செப்புச் சிலைகள், ஒப்பனை வளையல்கள், பாசிகள், சிப்பி, கிளிஞ்சல்கள், பானைகள், ஈமச் சின்னங்கள் அதிகம் கிடைத்துள்ளது இந்த நொய்யல் ஆற்றங்கரைப் பகுதியில் தான். மேற்குலக நாடுகளோடு கடல்வழி வாணிபத்தில் தொடர்பில் இருந்த தென்னகத்தின் பிரதானமான வணிக நகரங்கள் நொய்யல், அமராவதி நதி வழியே கொங்கு நாட்டில் சிறந்து விளங்கி நாட்டின் வளத்தைப் பெருக்கின.
கொடுமணல் இன்றும் கொங்கு நாட்டு வேளாளர்களில் சேரன், பாண்டியன், பனங்காடன் என்னும் கோத்திரத்தார்க்கு காணியாக விளங்கும் ஊராகும். கீரனூர் மடத்தைச் சேர்ந்த நமது அந்துவன் உள்ளிட்ட ஆறுகுலத்தாரின் குலகுருக்களே இவர்களுக்கும் குல குருக்களாக விளங்கி வருகின்றனர் என்பது கொடுமணலுக்கு முடிச்சுப் போடும் சிறு இழை.
கொடுமணலில் பழந்தமிழ் பொறிப்புகளோடு கூடிய பல்வேறு பானை ஓடுகள் உடைந்த நிலையில் கிடைத்துள்ளன. அவற்றில் அக்கால மக்களின் பெயர்கள் பல பொறிக்கப்பட்டுள்ளன. இதில் வரலாற்றுச் சிறப்புக்குரிய விஷயம் கொங்கு வேளாளர்களில் பெரும்பான்மையான கூட்டம் என்னும் கோத்திரம்/குடிப் பெயர்கள் இப்பானை ஓடுகளில் பயின்று வந்துள்ளது தான்.
பெயருக்கு முன் ஊர்ப் பெயரும், தந்தை பெயர் அல்லது குடியின் பெயரைச் சேர்த்தும், தொடர்ந்து தன் இயற் பெயரும், பெயருக்குப் பின் தன் சிறப்புப் பட்டப் பெயர்களைச் சேர்த்தும் குறித்துக் கொள்வது பழந்தமிழர் வழக்கமாகும்.
ஆதன், அந்துவன், சாத்தந்தை, பண்ணன், மணியன், வண்ணக்கன் என்ற பெயர்கள் கொடுமணல் பானை ஓடுகளில் காணப்படுகின்றன. இவை கொங்கு வேளாளர்களின் கூட்டப் பெயர்கள் ஆகும். இத்தகைய பழமையான சங்க கால தமிழ்ப் பெயர்களைக் தமது குடிப் பெயராகக் கொண்டிருக்கும் ஒரு பழந்தமிழ்ச் சமூகம் கொங்கு வேளாளர் சமூகம் என்பதற்கு இவை சான்றாகும்.
அவ்வகையில் இப்பானைப் பொறிப்புகளில் பலவும் இரண்டு பெயர்களாக குடிப் பெயரும் - இயற்பெயரும் என்ற அமைப்பில் வந்துள்ளது நோக்கலாம். அதில் ஒன்று தான் "அந்துவன் ஆதன்" எனப் பயின்று வந்துள்ள இப்பானையோட்டுப் பொறிப்பு. இதன் காலம் இற்றைக்கு 2500 ஆண்டு காலம் முந்தியது.
மூலம் : பண்டைக் குறியீடுகளும் எழுத்துகளும் - கா.ராஜன் - பக்கம் 17படம் : கொடுமணலில் தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புகள்
- https://www.kngac.ac.in/elearning-portal/ec/admin/contents/3_18K5TELT1_2020101607104197.pdf
அந்துவன் என்ற குடியில் வந்த ஆதன் என்பவரையோ, அந்துவன் என்ற தந்தையின் மகனான ஆதன் என்பவரையோ இப்பொறிப்பு சுட்டுகிறது.
'அந்துவன் சேரல்' (கரூர் வஞ்சி நகரை ஆண்ட சங்ககால 'இரும்பொறை' என்னும் சேர அரச பரம்பரை முதல்வன்)
'அந்துவன் சாத்தன்' (ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் ஐந்து நண்பர்களில் ஒருவராகவும் அமைச்சராகவும் விளங்கியவர்)
'அந்துவன் கீரன்' (சங்க காலக் குறுநிலமன்னன்)
'அந்துவன் செள்ளை' (இளஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னனின் தாய்)
'அந்துவன் பெற்றான்' (கொங்கு மண்டல சதகம் சொல்லும் அந்துவன் குல கொங்க வேளாளர்)
- என்கிற பெயர் பிரயோகங்களோடு இது ஒப்பிடத்தக்கது சிறப்புக்குரியதாகும்.
அந்துவன் செல்லும் இடமெல்லாம் அரசாள்வான் என்ற நம் குலப் பெண்கள் பெற்ற வரமும், நமது குலதெய்வமான செல்லாண்டியம்மன் தெய்வீக அருளும், உமையொருபாகனின் சித்தமும் இப்பெருமைகளை பேணும் வகையில் நம்மை அன்றும், இன்றும் போல என்றும் நல்வழிநடத்தி ஆள வேண்டுகிறேன். சிவ சிவா!
- அந்துவன் தனேஷ்