மூவேந்தர்களை விரித்துக் கூறும்போதும் சேர, சோழ, பாண்டியர் என்று சேரனை முன் வைத்துக் கூறுவதே தொல் வழக்கமாக உள்ளது.
சேர அரச வம்சத்தினர் பல கிளையினர் என்றும் அவர்கள் தமது வாரிசுகளின் மூலம் பல சிற்றரசுகளை நிர்வகித்தும் அவ்வக்காலத்தில் சேர வேந்தாக முடிசூடியும் ஆண்டுள்ளனர் என்று அறியப்படுகிறது.
சேரனுக்கு - பூழியன், உதியன், கொங்கன், பொறையன், வானவன், குட்டுவன், வானவரம்பன், வில்லவன், குடநாடன், வஞ்சி வேந்தன், கொல்லிச் சிலம்பன், கோதை, கேரளன், பொருநைத் துறைவன், போந்தின்கண்ணியன், மலையன், மலையமான் எனப் பல பெயர்கள் உண்டு.
கொங்கு நாட்டிற்கு உரிமை உடையவன் என்பதால் கொங்கன் என்றும் பேர் பெற்று விளங்கினர் சேரர். சேரர்களின் உரிமைக்குரிய மலை கொல்லி மலை ஆகும். உரிமைக்குரிய ஆறு அமராவதி என்னும் ஆண்பொருநை ஆறு ஆகும். இவற்றின் மூலம் சேரனின் முதன்மையான நிலப்பகுதியாக கொங்கே விளங்கியது என்பது விளங்கும்.
கொங்கு நாட்டில் சேரர்களின் எழுச்சி ஆநிறை ஓம்பிய குடியமைப்பில் கட்டமைக்கப்பட்டு எழுப்பட்டிருப்பது வரலாற்று ஆய்வாளர்களின் ஒத்த குரல்.
அதன் வழியே உண்டான சாதியமைப்பில் கொங்க வேளாளர்களின் தலைமையில் கொங்கு நாடு மென்மேலும் சிறப்புற்றது. வியப்பிற்கு இடம் ஏதுமின்றி கொங்க வேளாளர்கள் தமது கோத்திரங்களில்(கூட்டம்) சேர, சோழ, பாண்டியர் முதலான இன்ன பிற வேளிர்களுடனும் தொடர்புடையதாக அமைந்துள்ளது.
சேர அரசர்களின் வழியில் வந்தவர்கள் என்பது இன்றளவும் அவர்களது கோத்திரப் பெயர்களாக சேரன்/சேரலன், அந்துவன், ஆதன், ஆந்தை, வில்லி, பவளன், பனையன் ஆகிய பெயர்கள் வழங்கப்படுவதால் விளங்கும்.
உதியன் மரபினர் வீரகேரளர் என்ற பட்டப் பெயருடனும், அந்துவன் மரபினர் வஞ்சி வேள் என்கின்ற பட்டப் பெயருடனும் சேர அரியணை ஏறியதாக யூகிக்க முடிகிறது.
இன்றைக்கு வீரகேரள மரபினர் கொங்க வேளாளரில் சேரன்/சேரலன் கூட்டத்தினர் ஆக விளங்குகின்றனர். இவர்களது குலதெய்வம் மூலனூர் வஞ்சியம்மன்.
இரும்பொறை மரபினர் கொங்க வேளாளரில் அந்துவன் கூட்டத்தினர் ஆவர். இவர்களது குலதெய்வம் நாகம்பள்ளி(கரூர்) செல்லாண்டியம்மன்.
சோழ நாட்டில் இருந்து பிற்காலத்தில் குடியேறியவர்கள் தான் அனைத்து வேளாளர்களும் என்னும் கருத்து இதனால் அடிபடுகிறது.
வேளாண்மை என்பது தொழிற்பெயர் அல்ல, அது பண்புப் பெயர் என்பதையும் நாம் இங்கணம் கருத்தில் கொள்ள வேண்டும். உழவு, பசுக்காத்தல், வாணிகம் மூன்றும் வேளாண்மையின் பாற்படும். வேளாண்மை என்பது ஒளி போன்று ஆளும் தன்மையும், கொடுக்கும் தன்மையும், இரவா தன்மையும் ஆகும்!
சேரமான் பெருமாள் நாயனார் கைலாயம் சென்ற பின்னரும் சேர அரச மரபினர்கள் தம்முள் நாட்டாட்சியைப் பகிர்ந்து ஆண்டு வந்துள்ளனர். இடைக்காலத்திலும் மாறி மாறி இச்சேர அரச மரபினர் ஆண்டு வந்துள்ளமை தெரிகின்றது.
கொங்கு நாட்டுச் சரித்திர ஆவணங்கள் வஞ்சி நகரம் நான்கு என்று கூறுகின்றன. அவை சேலம், கரூர், மூலனூர், தாராபுரம் ஆகியன ஆகும்.
புலவர் செ.இராசு எழுதிய 'கொங்கு ஆய்வுகள்' என்னும் நூலில் இருந்து
வஞ்சி நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டதால் வஞ்சி வேந்தன் என்றும் பிற்காலத்தில் சோழர், பாண்டிய பேரசின் கீழ் வஞ்சி வேள் என்றும் அழைக்கப்பட்டான் சேரன்.
பதிவு #1 -இல் வஞ்சி வேள் என்னும் பட்டம் சேர அரசரைக் குறிக்கும் என்றும் அப்பட்டம் கொண்டவர்கள் கொங்க வேளாளரில் கருவூரில் காணி கொண்ட அந்துவன் கோத்திரத்தாராக விளங்குகின்றனர் என்றும் கண்டோம்.
https://andhuvan.blogspot.com/2019/12/blog-post.html
பதிவு #2 -இல் வஞ்சி வேளிர் - வ்ருஷ்ணி குல சம்பந்தம் விவரிக்கப்பட்டது.
https://andhuvan.blogspot.com/2021/02/2.html
இனி இதுவரை கிடைத்துள்ள வஞ்சி வேளிர் கல்வெட்டுகளை அவற்றின் கால வரிசைப் படியான பட்டியலை இப்பகுதியில் பார்க்கலாம்.
1) புகழூர் ஆறுநாட்டான் மலை பிராமி கல்வெட்டு:
சங்ககாலத்தில் பதிற்றுப்பத்து பாடப்பட்ட காலத்திலேயே சேரர்கள் இரண்டு மரபினராக ஆண்டு வந்தமை தெரிகின்றது. பதிற்றுப்பத்தில் முதல் பத்தும் கடைசிப் பத்தும் கிடைக்கவில்லை. உதியஞ்சேரல் மரபில் ஐவரும், அந்துவஞ்சேரல் இரும்பொறை மரபில் மூவரும் ஒவ்வொரு பத்திலும் பாடப்பட்டுள்ளனர்.
இவர்களில் அந்துவன் சேரல் இரும்பொறையின் வம்சமே கரூரைத் தலைநகராக் கொண்டு ஆண்ட சேர அரச மரபினர். பதிற்றுப் பத்தில் பாடப்பட்ட அந்துவன் மரபு சேரர்கள் -
1) செல்வக் கடுங்கோ வாழி ஆதன் (கபிலரின் 7 ஆம் பத்து)
2) பெருஞ்சேரல் இரும்பொறை (அரிசில் கிழாரின் 8 ஆம் பத்து)
3) இளஞ்சேரல் இரும்பொறை (பெருங்குன்றூர்க் கிழாரின் 9ஆம் பத்து)
இவர்களையே கரூர் அருகே உள்ள புகழூர் ஆறுநாட்டான் மலை தமிழ் பிராமிக் கல்வெட்டு "கோ ஆதன் செல் இரும்பொறை மகன் பெருங் கடுங்கோ மகன் இளங் கடுங்கோ" என்கிறது. இக்கல்வெட்டு சமணத் துறவிகளுக்கு செய்த கொடை பற்றி பொறிக்கப்பட்டுள்ளது.
2) கரூர் - வஞ்சி வேள் இரவி குவாவன் கல்வெட்டு
கரூர் நகரின் சங்ககால பெயரான வஞ்சி என்னும் பெயர் சொல்லும் மிகப் பழமையான கல்வெட்டுகளில் ஒன்று வஞ்சிவேள் கல்வெட்டு ஆகும். இது கரூர் அருகே செங்காளிபாளையத்தின் நத்தமேடு எனும் கிராமத்தில் உள்ள பழைய சிவன் கோவில் ஒன்றில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இக்கல்வெட்டு வஞ்சி வேள் என்னும் வேளிர் மரபில் வந்த இரவி குவாவன் என்பவனின் மனைவி நிறந்தேவியார் அவர்கள் வஞ்சிவேளிடம் ஐம்பது பொன் கொடுத்து நிலம் பெற்று அதனை கீழக்குடையூர் மகாதேவர் என்னும் சிவ பெருமானுக்கு அவர்தம் மூலக் கருவரையில் நந்தா விளக்கு எரிக்கவும், திருவமுது படைக்கவும் கொடையளித்த செய்தி இடம் பெற்றுள்ளது.
இதில் முக்கியமான குறிப்பு, கல்வெட்டு தமிழ் - வடமொழி இரண்டிலும் அமையப்பெற்றுள்ளது. வஞ்சி வேளை சமஸ்கிருதத்தில் 'வஞ்சி வ்ருஷ்ணி' என்று அழைத்திருப்பது சிறப்பான செய்தியாகும். இது 'வேள்' என்ற சொல்லிற்கு இணையாக 'வ்ருஷ்ணி, என்று வழங்கப்பட்டிருப்பதும், துவாரகையிலிருந்து கண்ண பிரானின் வ்ருஷ்ணி வம்சத்தில் உதித்த வேளிர்கள் தென்னாடு வந்தனர் எனும் பல உரையாசிரியர், ஆய்வறிஞர் கூற்றினுக்கும் வலுசேர்க்கிறது.
https://www.vikatan.com/government-and-politics/archaeology/important-information-about-karur-from-ancient-scriptures
ஆவணம் - இதழ் 16 (2007 பதிப்பு)
தமிழ்நாடு தொல்லியல் துறை பதிப்பு
3) கரூர் - வஞ்சி வேள் அடியான் கல்வெட்டு
வஞ்சி வேளின் அடியவன் ஒருவனுக்கு வைக்கப்பட்ட நடுகல் இது. "வஞ்சி வேளடியான்" என்றே குறிப்பிட்டு வருகிறது
கல்வெட்டு - இதழ் 75 - பக்கம் 49
4) கொடும்பாளூர் - மூவர் கோயில் இருக்குவேள் கல்வெட்டில் வஞ்சிவேள்
இந்தக் கல்வெட்டு புதுக்கோட்டை அருகே கொடும்பாளூரில் அமைந்துள்ள மூவர்கோயில் கல்வெட்டு. கல்வெட்டு இருக்கு வேள் மரபினனான பூதி விக்கிரம கேசரியின் வெற்றிகளை புகழ்கிறது. சோழருடன் இணக்கமாய் இருந்த இருங்கோ வேள் - பல்லவர், பாண்டியர், வஞ்சி வேள் ஆகியோரை வென்ற செய்திகளை விவரிக்கிறது.
"வஞ்சி வேளுக்கு கூற்றானவன்" என்ற பொருளில் "வஞ்சிவேள் அந்தகோ" என்று சமஸ்கிருதத்தில் அமைந்திருக்கிறது. பிற பெருவேந்தர்கள் வரிசையில் அவர்களுக்கு இணையாக அந்த வெற்றியினை இருக்கு வேள் புகழ்வதில் இருந்தும் பிற சான்றுகளாலும் வஞ்சியை முதன்மையான தலைநகராக ஆண்டு வந்த அவ்வேளிர் மரபினர் சேரரே என்பது தெளிவு.
5) ஈரோடு - வஞ்சி வேள் தாழி
ஈரோடு அருகே கொல்லம்பாளையத்தில் சேரன் கோ இரவிகோதை காலத்து கல்வெட்டு ஆகும். "தென்னவன் பேரரையன் ஆன வஞ்சி வேள்" என்பவன் தான் குளம் வெட்ட பொன் கொடுத்து நிலம் வாங்கிய செய்தியும், அதற்கு தாழி ஏரி என்று பெயரிட்ட செய்தியும் பொறிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு பொறிக்கப்பட்ட காலத்தில் சேர பட்டத்தில் கோஇரவி கோதை என்னும் வீரகேரள மரபினர் ஆட்சியில் இருந்ததாக அறிகிறோம். அதே நேரம் கல்வெட்டு வஞ்சி வேள் மரபினனைப் பற்றியதாக வருவதை காண முடிகிறது. சேர மரபினர் பலர் இருந்ததும் அவர்கள் மாறி மாறி ஆதிக்கம் செலுத்திக் கொண்டும், தத்தமது பகுதிகளுக்கு உட்பட்டும் ஆட்சி நடத்தியதாக தெரியவருகிறது.
பிற்காலத்தில் கரூரை தலைமையாகக் கொண்டிருந்த அந்துவன் என்னும் வஞ்சி வேள் மரபினரின் ஆட்சி குன்றி, தாராபுரத்தில் இருந்து ஆட்சி செய்த சேரன்/சேரலர் என்னும் வீரகேரள மரபினர் ஆதிக்கம் பெருகியதாக அறிய முடிகிறது.
6) நன்னனூர் - அதிராஜராஜ வஞ்சி வேள் (2 கல்வெட்டுகள்)
நன்னனூர் என்பது சங்க கால நன்னன் எனும் வேளிர் மன்னன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக அவன் பெயரில் அமைந்த ஊர் என அறியப்படுகிறது. தற்காலத்தில் இவ்வூர் ஆனைமலை எனும் பகுதியாக அறியப்படுகிறது.
அதிராஜராஜன் என்பது சேரனின் விருதுப் பெயர் என்பது ஆய்வறிஞர் கருத்து. அதனடிப்படையில் சேர நாடான கொங்கு மண்டலம் அதிராஜராஜ மண்டலம் என்றும் சேரனை வென்ற சோழன் எனும் பெயரில் கேரளாந்தக வளநாடு என்றும் பெயர் பெற்றது. பிற்பாடு வீரசோழ மண்டலம் என்றும் அறியலானது.
கீழ்வரும் இருகல்வெட்டும் அதிராஜராஜ தேவன் என்னும் சோழருக்கு அடங்கிய வீரகேரளர் ஆட்சிக் காலத்தது. ஆளுடையார் நக்காண்டார் எனும் பெயர் அமைந்த சோமேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ளன.
கல்வெட்டு-1:
- கோயிலின் தெற்கு ஜகதியில் பொறிக்கப்பட்டுள்ளது.
- வட்டமணியன் வஞ்சி வேள் கல்வெட்டு
வட்டமணியனான அதிராஜராஜ வஞ்சிவேளான் என்பவனின் மனைவியும், வெள்ளாளரில்
பூதந்தை கோத்திரத்து மணியம் அரையனான ராஜராஜ வல்லவரையன் என்பவனும் நந்தா விளக்கு எரிக்க கழஞ்சு என்னும் பொற்காசுகள் 10 கொடை அளித்த செய்தியை விவரிக்கிறது.

தமிழ்நாடு தொல்லியல் துறை - கோவை மாவட்டக் கல்வெட்டுக்கள்
கல்வெட்டு - 2:
- கோயிலின் வடக்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது
- காணிச்சேரி விழுப்பரையன் வஞ்சிவேள் கல்வெட்டு
காணிச்சேரி விழுப்பரையன் என்னும் அதிராஜராஜ வஞ்சிவேள் என்பவனின் மனைவி திருக்கோவிலில் நந்தா விளக்கு எரிக்க பொற்காசுகள் கொடுத்த செய்தி பற்றியது.
Epigraphia India A.R. No. 214 of 1927-1928
குறிப்பு: இவ்விரு கல்வெட்டுச் செய்திகள் ஒன்று போல் தான் இருக்கிறது.
ஆனால் முன்னதில் தமிழ்நாடு தொல்லியல் துறை தெற்கு ஜகதி என்றும், பின்னதில் மத்திய தொல்லியல் துறை வடக்கு சுவர் என்றும் பதித்துள்ளமை கொண்டு இரண்டு கல்வெட்டாக கொள்ளப்படுகிறது.
மேலும் வஞ்சி வேளை 'வட்டமணியன்' என்று முதல் கல்வெட்டிலும், 'விழுப்பரையன்' என இரண்டாம் கல்வெட்டிலும் வரும் நுணுக்கமான வேறுபாடும் கணக்கில் கொள்ளப்பட்டது.
புலவர் இராசு இவ்விரு செய்தியையும் கலந்தாற் போல, கல்வெட்டுப் படி கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டு பூச்சந்தை கோத்திர கொங்க வேளாளர் கல்வெட்டுகளின் கீழ் இக்கல்வெட்டை கீழ்வருமாறு பதிவு செய்துள்ளார்.
கொங்கு வேளாளர் கல்வெட்டுகள் - புலவர் செ.இராசு
7) கரூர் - வஞ்சி வேள் அந்துவன்
இது கொங்குச் சோழன் வீரராசேந்திரன் காலத்தில் கொங்க வேளாளரில் அந்துவன் கோத்திரத்தார் பற்றிய செய்தி சொல்லும் கல்வெட்டு ஆகும். தற்காலத்தில் மலைக்கோவிலூர் என்று அறியப்படும் மகாபலேஸ்வரர் திருக்கோவிலில் இக்கல்வெட்டு அமைந்திருக்கிறது.
வீரசோழ மண்டலம் என அழைக்கப்பட்ட கொங்கு மண்டலத்தில் வெங்கால நாட்டில் பழநாகம்பள்ளி எனும் ஊரில் வசிக்கும் வெள்ளாளரில் அந்துவரில் பெருக்கன் வஞ்சி வேளான் ஆன பெற்றான் என்பவரின் கோயிற் திருப்பணி குறித்த செய்தியை குறிப்பிடுகிறது.
இது வரை வஞ்சி வேள் என பல கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டிருந்தாலும் அது இன்னார் தான் என ஐயம் திரிபற குறிப்பிடும் கல்வெட்டு இதுவே ஆகும். அதுவும் சங்க கால மன்னன் அந்துவன் சேரல் மன்னனின் பெயரில் அமைந்த கோத்திர பெயரும், அவர்களின் தலைநகரான கரூரிலேயே கிடைத்திருப்பதும், இப்பகுதியில் அந்துவன் கோத்திரத்தாரே மிகுந்திருப்பதும், இக்கோயில் தர்மகர்த்தர்களாக அந்துவர்களே இன்றளவும் விளங்கிவருவதும் அதிமுக்கியமான குறிப்புகளாகும்.
கொங்கு வேளாளர் கல்வெட்டுகள் - புலவர் செ.இராசு
8) கீரனூர் - இஞ்சி வேள்
இக்கல்வெட்டு கொங்குச் சோழன் வீரராசேந்திரன் காலத்தில் காங்கேயம் வட்டம் கீரனூரில் அமைந்திருக்கும் ஆதிநாதேஸ்வரர் திருக்கோவிலில் பொறிக்கப்பட்டது. இது கரூர் வஞ்சி வேள் கல்வெட்டுக்கு சமகாலத்தது ஆகும். கொங்க வெள்ளாளரில் அந்துவரில் - இளைய செல்ல நாயன் எனும் இஞ்சி வேளான் தூண் கொடையளித்த செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.
அந்துவர்களின் முதன்மைக் காணி நாகம்பள்ளி என்றும் இரண்டாவது காணி கீரனூரும் ஆகும்.
கொங்கு வேளாளர் கல்வெட்டுகள் - புலவர் செ.இராசு
கீரனூர் பற்றி இலக்கியங்களில் பெற்றான் மகன் செல்லப்பன்.
வஞ்சி வேள் கல்வெட்டு பெற்றானைக் குறிப்பதாகவும், இஞ்சி வேள் கல்வெட்டு அவர் மகன் இளைய செல்ல நாயனை குறிப்பதாகவும்.. கீரனூர் பற்றிக் கூறும் பிற இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம்.
இப்பாடலில் அந்துவரில் காணிகளான நாகம்பள்ளி, கீரனூர், மோடமங்கலம் ஆகியவை குறிக்கப்படுகிறது. மூன்று காணிகளிலும் மூவேந்தர்க்கு எல்லை பிரித்துக் கொடுத்த செல்லாண்டி அம்மன் தான் குலதெய்வமாக விளங்குகிறாள்.
9) கொங்கூர் (தாராபுரம்) - வஞ்சிவேள்
இக்கல்வெட்டு கொங்குச் சோழன் வீர ராசேந்திரன் காலத்தில் கொங்கூர் என அழைக்கப்பட்ட தாராபுரத்தில் பசுபதீஸ்வரர் கோயிலில் அமைந்த கல்வெட்டு ஆகும். "பெரியான் காவன் ஆன வஞ்சி வேளானேன்" என்பவரைக் குறிக்கிறது. கல்வெட்டு வரிகள் தொடர்ச்சியாக இல்லை என்பது குறிப்பு.
10) கடற்றூர் - மன்றாடி வஞ்சி வேள்
இக்கல்வெட்டு கொங்குச் சோழன் மூன்றாம் விக்கிரம சோழன் காலத்தில் கடற்றூர்(தற்சமயம் உடுமலைப்பேட்டை) எனும் ஊரில் மருதீசர் கோயிலில் அமையப்பெற்றுள்ளது. கடற்றூரின் "மன்றாடி - வஞ்சி வேளான்" என்பவர் திருக்கோயிலிற்கு தூண் கொடையாக அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது.