புதன், 18 செப்டம்பர், 2024

யது குல சேரர் (எனும்) வஞ்சி வேள் அந்துவர்


தமிழகத்தின் மூவேந்தர்களான சேர சோழ பாண்டியரை முறையே அக்னி வம்ச, சூரிய வம்ச, சந்திர வம்சம் என்று சொல்வதுண்டு.


இதில் சேரர்களை அக்னி வம்சம் என்று சொல்லும் நடைமுறை பற்றிய வலுவான ஆதாரங்கள் இடைக்கால இலக்கியங்களிலேயே கிடைக்கிறது. கல்வெட்டுகளில் செப்பேடுகளில் இடைக்கால சேரர்கள் தங்களை வீரகேரளர் என்றும் சந்திர-ஆதித்ய வம்சம் என்றும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.


இதுவே சங்க கால இலக்கியங்களை திருப்பிப்பார்த்தால் முச்சுடராகிய சூரிய சந்திர அக்னி என்கிற வழக்கிற்கு மாறாக அக்னியின் இடத்தில் மழையை வைத்துப் பாடப்படுகிறது. சேர வம்சத்து இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகார மங்கல வாழ்த்துப் பாடல் ஞாயிறு போற்றுதும்! திங்கள் போற்றுதும்! மாமழை போற்றுதும்! என்று இந்த வழக்கத்தை எடுத்துக் காட்டுகிறது.


மேலும், சேர வம்சம் இரண்டு கிளைகளாக செயல்பட்டு வந்ததை நமக்கு சங்க இலக்கியமான பத்துப்பாட்டு தெளிவிக்கின்றது. உதியன் சேரல் ஆதன் மற்றும் அந்துவன் சேரல் இரும்பொறை என்போரால் இந்த இவ்விரு மரபுகளும் எழுச்சி பெற்றதை நிறுவுகின்றன. பரசுராமரோடு தொடர்புடையோராக வரும் அக்னி வம்சத்துக்கும் இவர்களுக்குமான தொடர்பு சரியாக நிறுவப்படவில்லை. ஆனால் இவர்கள் சந்திர வம்சத்து கிளையான யது வம்சத்தவர்கள் என்பதற்கு தெளிவான கருத்துக்கள் வரலாறு நெடுகிலும் பதிவு செய்யப்பட்டு வந்துள்ளது.


குறிப்பாக கொங்கு வேளாள கவுண்டர்களில் அந்துவன் கோத்திரத்தார்கள் சங்ககால இரும்பொறை மரபினை தோற்றுவித்த அந்துவன் சேரல் இரும்பொறை வழியினர் என்பதற்கு சான்றாதாரங்கள் அள்ளக் கிடைக்கின்றன.


வீரகேரளராக ஆண்ட சேரர்கள் கொங்கு வேளாளர்களில் சேரன் கோத்திரத்தவர்கள் என்பதும் எனது கூற்று. இவர்களே உதியன் மரபினர் என்பதும் எனது கூற்று. அந்துவன் மற்றும் சேரன்/சேரலன் என்னும் இரண்டு கோத்திரங்களைத் தவிர சேரரோடு தொடர்புடைய மற்றைய கோத்திரங்கள் - ஆதன்/ஆதி, பனையன், வில்லி, பவளன் ஆகும். இவர்களை பற்றிய மேலதிக ஆய்வு தேவை.


வஞ்சி வேளிர்களான அந்துவர்கள் = யது குலத்து சேரர்களே என்று இதுவரை கிடைத்த ஆதாரங்களின் படி நிறுவுவதே இந்த பதிவு. அதற்கான ஆதாரங்களை வரிசைக் கிரமமாக பார்ப்போம்.


1) சேர ராஜக்கள் பரம்பரையில் முதலாகக் குறிக்கப்படுகின்றவர் - யது குலச் சேரன். 'எது' என்பது 'யது' என்பதின் தமிழ் வடிவம்.



2) சேரன் ஆனவன் இலாட வளநாட்டில் யாதவர்களான நந்த கோபாலர்களின் குடியிருப்பில் பிறந்தவன் எனச் சொல்லும் சோழன் பூறுவ பட்டயம். இலாடபுரி என்று ஒரு கல்வெட்டில் இன்றைய தாராபுரம் பதியப்பட்டுள்ளது. தாராபுரம் சேரர் தலைநகரமாக விளங்கிய நான்கு வஞ்சி நகரங்களுள் ஒன்றாகும். மற்றவை கரூர், மூலனூர், சேலம் ஆகும். இவை சேரனின் அமராவதி ஆற்றங்கரை நகரங்கள்.



3) சேரனுக்குக் 'கொங்கன்' என்பது ஒரு பெயர். கொங்கர் என்றால் கொங்கு நாட்டை உடையவர் என்று பொருள். பதிற்றுப் பத்து 22 - 'ஆகெழு கொங்கர்'  - ஆநிறைச் செல்வம் உடைய கொங்கர் என்கிறது.



4) அகத்தியரோடு தென்னாடு வந்த வேளிர்கள் கிருஷ்ணர்(நெடுமுடியண்ணல்) வழியினர்(வ்ருஷ்ணி குலம்) என்றும் அவர்கள் காடு கொன்று நாடுகளை உண்டாக்கியதைப் பற்றியும் நச்சினார்க்கினியரின் தொல்காப்பிய உரையில் சொல்லியிருப்பது.


5) கண்ணன் யாதவ குலத்தில் வ்ருஷ்ணி என்னும் கிளை மரபில் உதித்தவன். இந்த வ்ருஷ்ணிகளை விராத்தியர் என்ற குறிப்பையும் நோக்க! விராத்தியர்களின் விராடபுரம் என்பதே தமிழில் இலாடபுரி என்று தாராபுரத்தைக் குறித்தது. அது சேரனின் நான்கு வஞ்சிகளின் ஒன்றாகும் முதல் சான்றில் உலாச் சேரன் பிறந்தது இலாடபுரி என்று குறித்துள்ளது.






6) யாதவ கண்ணனின் மாமன் கம்சனின் குலம் அந்தகர் குலம். இவர்களும் மூலத்தில் யாதவரே. அந்தகர் - வ்ருஷ்ணி இரண்டும் எப்போதும் ஒன்றாகவே குறிப்பிடப்படுகின்றன.

சம்புகன் (Shambuka) என்ற வடசொல் தமிழில் 'சம்புவன்' ஆவது போல
அந்தகர் --> அந்துவர் என்றாவதற்கு மொழியியல் வழக்கம் உள்ளது.

ஆனால் இந்த குறிப்பை நிறுவ மேலதிக ஆதாரங்கள் தேவை.

எப்படிக் கொண்டாலும் வ்ருஷ்ணி என்பது சிறப்பாக கிருஷ்ணர் வழியினரையும், பொதுவாக வேளிரையும் குறிப்பதே ஆகும். அந்தக-வ்ருஷ்ணிகள் யது வம்ச கிளைகளே!


7) வஞ்சி வேள் ரவி குஹாபன் கல்வெட்டு - 'வேளிர்' என்பதற்கு சமமான வடசொல் 'வ்ருஷ்ணி' என்பதற்கு சான்றாக உள்ளது.

வஞ்சி வ்ருஷ்ணி = வஞ்சி வேளிர்.

இது அகத்தியோரொடு வந்த கண்ணன் வழியினரே வேளிர் என்று சிறப்பாக நச்சினார்க்கினியர் சொன்ன சிறப்புரையோடு ஒபபிட்டு நோக்கத்தக்கது.



8) வஞ்சி வேள் என்பானை போரில் கொன்றதை விதந்தோதிக் கொள்ளும் கொடும்பாளூர் இருங்கோ வேளிர் வழியினனான பூதி விக்கிரம கேசரி.

பல்லவர், பாண்டியரோடு இணையாக வைத்து வஞ்சி வேளை சொல்வது... வஞ்சியை தலைநகராகக் கொண்ட சேரரையே கூறிக்கும் என்பது ஆய்வாளர்கள் கூற்று.


9) வஞ்சி வேந்தன் என்று சேரனை குறிக்கும் நிகண்டுகள் (படத்தில் பிங்கல நிகண்டு).

வஞ்சி என்பது கருவூர் நகரைக் குறிப்பது. கருவூரைத் தலைநகரமாகக் கொண்டோர் சேரர்கள். இது அவர்களது கொல்லி மலைக்கும் அமராவதிக்கும் அருகில் அமைந்த நகரமாகும்.

அகத்தியரோடு தென்னாடு வந்த வேளிர்களில் தலைசிறந்த மூவரே வேந்தராக முடிசூடினர். பின்னாளில் சளுக்கியர், ஒய்சளர், பல்லவர், கங்கர், கடம்பர் முதலிய வேளிர்கள் வேந்தரான போது சேரர்கள் வேளிர் சிற்றரசராகச் சுருங்கினர்.



9) சேரர்கள் வேந்தர் நிலையில் இருந்த வேளிரே என்பதற்குச் சங்கச் சான்று- புறநானூறு-13 ஆம் பாடல்.

சங்க காலத்தில் சோழ மன்னனின் யானை மதம் பிடித்து கருவூருக்குள் வந்த போது அந்துவஞ் சேரல் இரும்பொறை தனது வேண்மாடத்தில் (வேளிர் மாளிகை = அரச மாளிகை) நின்று கொண்டு பேசிக் கொண்டதாக வரும் புறநானூற்றுப் பாடல் குறிப்பில் உள்ளது.

 
10) வஞ்சி நகரான கரூவூர் அருகே சேரனுக்குரிய அமராவதி ஆற்றங்கரையில் பழநாகம்பள்ளி என்னும் ஊரைக் காணி கொண்டுள்ள அந்துவர்கள்

இரண்டு பாடல்களிலும் முதற்காணியாக நாகம்பள்ளியே வருகிறது நாகம்பள்ளி வஞ்சி நகரான கருவூரின் தென் பகுதி ஆகும். அதனால் தென் வஞ்சி என அழைக்கப்பட்டது.



11) வஞ்சி வேள் எனும் பட்டமுடைய கொங்கு வேளாள அந்துவர்கள் - பழநாகம்பள்ளி எனும் மலைக்கோவிலூர் சிவன் கோயில் கல்வெட்டு.

அந்துவன் என்கிற கோத்திரப் பெயரும் - வஞ்சி வேள் என்ற பட்டமும் இவர்கள் சேர வழியினர் தான் என்று அறுதியிட்டுக் கூறும் சான்றாக அமைந்துள்ளது.

வஞ்சி வ்ருஷ்ணி என்று இரவி குஹாபனாகிய சேரனை அழைக்கும் மேற்கூறிய சான்று-7 உம் இதே கரூவூரிலேயே கிடைப்பதும் இணைத்துப் பார்க்கத் தக்கது.



12) கொங்கு வேளாள அந்துவர்கள் வஞ்சி நகரை ஆண்டது பற்றிக் கூறும் கீரனூர் இலக்கியம். தென்வஞ்சி நகராள்பவர் என்று அந்துவ குல பெற்றாக் கவுண்டர் மகன் செல்லப்ப கவுண்டரைப் பாடுகிறது.
13) மூவேந்தருக்கு எல்லை பிரித்துக் கொடுத்த ஸ்ரீ செல்லாண்டி அம்மனே அந்துவர்களின் குலதெய்வமாக அருள்பாலிக்கிறாள்.

முன்பு சேர-சோழ-பாண்டிய அரசர்களிடையே எல்லைப் பிரச்சனை வரவே... மூன்று நாட்டுக்கும் மையப்புள்ளியான மதுக்கரை(மதில் கரை) எனும் ஊரில் நின்று எல்லை பிரித்துக் கொடுத்த செல்லாண்டி அம்மனை அவள் அருளோடு மூன்று பாகமாகப் பிரித்து...
பாண்டியர் தலைப் பாகத்தை வைகைக் கரையான சிம்மக்கல்லிலும்,
சோழர் கால் பாகத்தை காவிரிக் கரையான பாண்டமங்கலத்திலும்,
சேரர் இடைப்பாகத்தை ஆண்பொருநை என்னும் அமரவாதிக் கரையிலும் கோயில் எழுப்பி வழிபட்டு வந்ததாக வரலாறு.

அது நாகம்பள்ளி ஸ்ரீ செல்லாண்டி அம்மன் கோவிலே என்பது எனது கூற்றாகும்.

ஸ்ரீ செல்லாண்டியம்மனே... கீரனூரில் ஸ்ரீ செல்வநாயகி அம்மன்,  மோடமங்கலத்தில் செல்லி அம்மன் என்ற பெயர்களுடன் அருள் பாலிக்கிறாள்.


14) மேற்கண்ட சான்றுகளின் படி இந்த வஞ்சி வேளிர்கள் அந்துவரே எனப் பெறப்படுகிறது. இந்த வஞ்சி வேளிருக்கு 'மன்றாடி' என்கிற பட்டம் உள்ளதற்கு கடத்தூர் மருதீசர் கோயில் கல்வெட்டு சான்றாகிறது. இது வஞ்சி வேளிரை ஆநிறைச் செல்வத்திற்கு உரியவர் என்பதை நிறுவுகிறது.

மன்றாடி என்பது ஆநிறைச் செல்வம் மிக்க குடித் தலைவனுக்கு வழங்கப்படும் அரச பட்டமாகும். கொங்கு நாடு முழுக்க மன்றாட்டு எனும் ஆட்சி முறையும் கொங்கு வேளாளர்களுக்கு மன்றாடி என்கிற பட்டம் சிறப்பாக இருந்துள்ளது. இது கொங்கு நாடு முல்லைப் பாங்கான ஆநிறை மேய்ச்சலுக்கு உகந்த பகுதி என்பதற்குச் சான்றாகும். 

வஞ்சி வேள் மன்றாடி(அந்துவன்), காங்கேய மன்றாடி(பொருளந்தை), பல்லவராய மன்றாடி(செங்கண்ணன்), சர்க்கரை மன்றாடி(பயிரன்), மசக்காளி மன்றாடி(புல்லன்), உலகுடைய மன்றாடி(சாத்தந்தை), தேவ மன்றாடி(குழாயன்), வாலை மன்றாடி(பொன்னன்) ஆகியோர் கொங்கு வேளாளர்களில் மன்றாடிப் பட்டம் கொண்ட வேளிர்கள் ஆவர்.



வஞ்சி வேள் என்று மொத்தம் 10 கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. அவற்றில் 3 மட்டுமே இங்கு எடுத்தாளப்பட்டுள்ளது. அனைத்து கல்வெட்டுகளையும் படிக்க - இங்கே அழுத்தவும்!


மேற்கூறியுள்ள ஆதாரங்களினால் பெறப்படுவது:

யது குல கிளை வம்சமான கிருஷ்ணன் பிறந்த வ்ருஷ்ணி குலத்தில் உதித்து...
தமிழ் முனிவன் அகத்தியரோடு தென்னாடு வந்து...
அமராவதி ஆற்றுப்படுகையில் காடு கொன்று நாடாக்கி...
வஞ்சி எனும் கரூவூர் நகரம் தலைநகராக கொங்கு நாட்டை ஆண்டு...
மன்றாடி என ஆநிறைச் செல்வங்களுடன் காணிகள் பல கண்டு...
கங்கை குலமான கொங்கு வேளாள கவுண்டரில் மற்ற வேளிருடன் ஐக்கியமான...
சங்ககால சேரரின் கிளையான இரும்பொறை வம்சத்தினரே...
வஞ்சி வேளிர்களான அந்துவன் கோத்திரத்தார்!

யது குல சேரர் = வஞ்சி வேள் அந்துவர்!

----------------------------------------------------- XXX ------------------------------------------------------

#அந்துவர் #வஞ்சிவேள் #சேரர் #இரும்பொறை
#யாதவர் #வ்ருஷ்ணி #கிருஷ்ணன் #மன்றாடி
#கொங்கர் #வேளாளர் # கவுண்டர் #கங்கை குலம் #வேளிர்


வியாழன், 1 டிசம்பர், 2022

வஞ்சி வேள் - அந்துவன்! பதிவு #3 - "வஞ்சி வேளிர் கல்வெட்டு வரிசை"

மூவேந்தர்களை விரித்துக் கூறும்போதும் சேர, சோழ, பாண்டியர் என்று சேரனை முன் வைத்துக் கூறுவதே தொல் வழக்கமாக உள்ளது.

சேர அரச வம்சத்தினர் பல கிளையினர் என்றும் அவர்கள் தமது வாரிசுகளின் மூலம் பல சிற்றரசுகளை நிர்வகித்தும் அவ்வக்காலத்தில் சேர வேந்தாக முடிசூடியும் ஆண்டுள்ளனர் என்று அறியப்படுகிறது. 

சேரனுக்கு - பூழியன், உதியன், கொங்கன்பொறையன், வானவன், குட்டுவன், வானவரம்பன், வில்லவன், குடநாடன், வஞ்சி வேந்தன்கொல்லிச் சிலம்பன், கோதை, கேரளன், பொருநைத் துறைவன், போந்தின்கண்ணியன், மலையன், மலையமான் எனப் பல பெயர்கள் உண்டு.

கொங்கு நாட்டிற்கு உரிமை உடையவன் என்பதால் கொங்கன் என்றும் பேர் பெற்று விளங்கினர் சேரர். சேரர்களின் உரிமைக்குரிய மலை கொல்லி மலை ஆகும். உரிமைக்குரிய ஆறு அமராவதி என்னும் ஆண்பொருநை ஆறு ஆகும். இவற்றின் மூலம் சேரனின் முதன்மையான நிலப்பகுதியாக கொங்கே விளங்கியது என்பது விளங்கும்.

கொங்கு நாட்டில் சேரர்களின் எழுச்சி ஆநிறை ஓம்பிய குடியமைப்பில் கட்டமைக்கப்பட்டு எழுப்பட்டிருப்பது வரலாற்று ஆய்வாளர்களின் ஒத்த குரல்.

அதன் வழியே உண்டான சாதியமைப்பில் கொங்க வேளாளர்களின் தலைமையில் கொங்கு நாடு மென்மேலும் சிறப்புற்றது. வியப்பிற்கு இடம் ஏதுமின்றி கொங்க வேளாளர்கள் தமது கோத்திரங்களில்(கூட்டம்) சேர, சோழ, பாண்டியர் முதலான இன்ன பிற வேளிர்களுடனும் தொடர்புடையதாக அமைந்துள்ளது.

சேர அரசர்களின் வழியில் வந்தவர்கள் என்பது இன்றளவும் அவர்களது கோத்திரப் பெயர்களாக சேரன்/சேரலன், அந்துவன், ஆதன், ஆந்தை, வில்லி, பவளன், பனையன் ஆகிய பெயர்கள் வழங்கப்படுவதால் விளங்கும்.

உதியன் மரபினர் வீரகேரளர் என்ற பட்டப் பெயருடனும், அந்துவன் மரபினர் வஞ்சி வேள் என்கின்ற பட்டப் பெயருடனும் சேர அரியணை ஏறியதாக யூகிக்க முடிகிறது.

இன்றைக்கு வீரகேரள மரபினர் கொங்க வேளாளரில் சேரன்/சேரலன் கூட்டத்தினர் ஆக விளங்குகின்றனர். இவர்களது குலதெய்வம் மூலனூர் வஞ்சியம்மன்.

இரும்பொறை மரபினர் கொங்க வேளாளரில் அந்துவன் கூட்டத்தினர் ஆவர். இவர்களது குலதெய்வம் நாகம்பள்ளி(கரூர்) செல்லாண்டியம்மன்.

சோழ நாட்டில் இருந்து பிற்காலத்தில்  குடியேறியவர்கள் தான் அனைத்து வேளாளர்களும் என்னும் கருத்து இதனால் அடிபடுகிறது.

வேளாண்மை என்பது தொழிற்பெயர் அல்ல, அது பண்புப் பெயர் என்பதையும் நாம் இங்கணம் கருத்தில் கொள்ள வேண்டும். உழவு, பசுக்காத்தல், வாணிகம் மூன்றும் வேளாண்மையின் பாற்படும். வேளாண்மை என்பது ஒளி போன்று ஆளும் தன்மையும், கொடுக்கும் தன்மையும், இரவா தன்மையும் ஆகும்! 

சேரமான் பெருமாள் நாயனார் கைலாயம் சென்ற பின்னரும் சேர அரச மரபினர்கள் தம்முள் நாட்டாட்சியைப் பகிர்ந்து ஆண்டு வந்துள்ளனர். இடைக்காலத்திலும் மாறி மாறி இச்சேர அரச மரபினர் ஆண்டு வந்துள்ளமை தெரிகின்றது.

கொங்கு நாட்டுச் சரித்திர ஆவணங்கள் வஞ்சி நகரம் நான்கு என்று கூறுகின்றன. அவை சேலம், கரூர்மூலனூர்தாராபுரம் ஆகியன ஆகும்.


புலவர் செ.இராசு எழுதிய 'கொங்கு ஆய்வுகள்'  என்னும் நூலில் இருந்து 

வஞ்சி நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டதால் வஞ்சி வேந்தன் என்றும் பிற்காலத்தில் சோழர், பாண்டிய பேரசின் கீழ் வஞ்சி வேள் என்றும் அழைக்கப்பட்டான் சேரன்.

பதிவு #1 -இல் வஞ்சி வேள் என்னும் பட்டம் சேர அரசரைக் குறிக்கும் என்றும் அப்பட்டம் கொண்டவர்கள் கொங்க வேளாளரில் கருவூரில் காணி கொண்ட அந்துவன் கோத்திரத்தாராக விளங்குகின்றனர் என்றும் கண்டோம்.

https://andhuvan.blogspot.com/2019/12/blog-post.html

பதிவு #2 -இல் வஞ்சி வேளிர் - வ்ருஷ்ணி குல சம்பந்தம் விவரிக்கப்பட்டது.

https://andhuvan.blogspot.com/2021/02/2.html

இனி இதுவரை கிடைத்துள்ள வஞ்சி வேளிர் கல்வெட்டுகளை அவற்றின் கால வரிசைப் படியான பட்டியலை இப்பகுதியில் பார்க்கலாம்.

1) புகழூர் ஆறுநாட்டான் மலை பிராமி கல்வெட்டு:

சங்ககாலத்தில் பதிற்றுப்பத்து பாடப்பட்ட காலத்திலேயே சேரர்கள் இரண்டு மரபினராக ஆண்டு வந்தமை தெரிகின்றது. பதிற்றுப்பத்தில் முதல் பத்தும் கடைசிப் பத்தும் கிடைக்கவில்லை. உதியஞ்சேரல் மரபில் ஐவரும், அந்துவஞ்சேரல் இரும்பொறை மரபில் மூவரும்  ஒவ்வொரு பத்திலும் பாடப்பட்டுள்ளனர். 

இவர்களில் அந்துவன் சேரல் இரும்பொறையின் வம்சமே கரூரைத் தலைநகராக் கொண்டு ஆண்ட சேர அரச மரபினர். பதிற்றுப் பத்தில் பாடப்பட்ட அந்துவன் மரபு சேரர்கள் - 

1) செல்வக் கடுங்கோ வாழி ஆதன் (கபிலரின் 7 ஆம் பத்து)

2) பெருஞ்சேரல் இரும்பொறை (அரிசில் கிழாரின் 8 ஆம் பத்து)

3) இளஞ்சேரல் இரும்பொறை (பெருங்குன்றூர்க் கிழாரின் 9ஆம் பத்து)

இவர்களையே கரூர் அருகே உள்ள புகழூர் ஆறுநாட்டான் மலை தமிழ் பிராமிக் கல்வெட்டு "கோ ஆதன் செல் இரும்பொறை மகன் பெருங் கடுங்கோ மகன் இளங் கடுங்கோ" என்கிறது. இக்கல்வெட்டு சமணத் துறவிகளுக்கு செய்த கொடை பற்றி பொறிக்கப்பட்டுள்ளது. 


2) கரூர் - வஞ்சி வேள் இரவி குவாவன் கல்வெட்டு

கரூர் நகரின் சங்ககால பெயரான வஞ்சி என்னும் பெயர் சொல்லும் மிகப் பழமையான கல்வெட்டுகளில் ஒன்று வஞ்சிவேள் கல்வெட்டு ஆகும். இது கரூர் அருகே செங்காளிபாளையத்தின் நத்தமேடு எனும் கிராமத்தில் உள்ள பழைய சிவன் கோவில் ஒன்றில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இக்கல்வெட்டு வஞ்சி வேள் என்னும் வேளிர் மரபில் வந்த இரவி குவாவன் என்பவனின் மனைவி நிறந்தேவியார் அவர்கள் வஞ்சிவேளிடம் ஐம்பது பொன் கொடுத்து நிலம் பெற்று அதனை கீழக்குடையூர் மகாதேவர் என்னும் சிவ பெருமானுக்கு அவர்தம் மூலக் கருவரையில் நந்தா விளக்கு எரிக்கவும், திருவமுது படைக்கவும் கொடையளித்த செய்தி இடம் பெற்றுள்ளது.

இதில் முக்கியமான குறிப்பு, கல்வெட்டு தமிழ் - வடமொழி இரண்டிலும் அமையப்பெற்றுள்ளது. வஞ்சி வேளை சமஸ்கிருதத்தில் 'வஞ்சி வ்ருஷ்ணி' என்று அழைத்திருப்பது சிறப்பான செய்தியாகும். இது 'வேள்' என்ற சொல்லிற்கு இணையாக 'வ்ருஷ்ணி, என்று வழங்கப்பட்டிருப்பதும், துவாரகையிலிருந்து கண்ண பிரானின் வ்ருஷ்ணி வம்சத்தில் உதித்த வேளிர்கள் தென்னாடு வந்தனர் எனும் பல உரையாசிரியர், ஆய்வறிஞர் கூற்றினுக்கும்  வலுசேர்க்கிறது.


https://www.vikatan.com/government-and-politics/archaeology/important-information-about-karur-from-ancient-scriptures


ஆவணம் - இதழ் 16 (2007 பதிப்பு)

 தமிழ்நாடு தொல்லியல் துறை பதிப்பு

3) கரூர் - வஞ்சி வேள் அடியான் கல்வெட்டு

வஞ்சி வேளின் அடியவன் ஒருவனுக்கு வைக்கப்பட்ட நடுகல் இது. "வஞ்சி வேளடியான்" என்றே குறிப்பிட்டு வருகிறது


கல்வெட்டு - இதழ் 75 - பக்கம் 49

4) கொடும்பாளூர் - மூவர் கோயில் இருக்குவேள் கல்வெட்டில் வஞ்சிவேள் 

இந்தக் கல்வெட்டு புதுக்கோட்டை அருகே கொடும்பாளூரில் அமைந்துள்ள மூவர்கோயில் கல்வெட்டு. கல்வெட்டு இருக்கு வேள் மரபினனான பூதி விக்கிரம கேசரியின்  வெற்றிகளை புகழ்கிறது. சோழருடன் இணக்கமாய் இருந்த இருங்கோ வேள் - பல்லவர், பாண்டியர், வஞ்சி வேள் ஆகியோரை வென்ற செய்திகளை விவரிக்கிறது.

"வஞ்சி வேளுக்கு கூற்றானவன்" என்ற பொருளில் "வஞ்சிவேள் அந்தகோ" என்று சமஸ்கிருதத்தில் அமைந்திருக்கிறது. பிற பெருவேந்தர்கள் வரிசையில் அவர்களுக்கு இணையாக அந்த வெற்றியினை இருக்கு வேள் புகழ்வதில் இருந்தும் பிற சான்றுகளாலும் வஞ்சியை முதன்மையான தலைநகராக ஆண்டு வந்த அவ்வேளிர் மரபினர் சேரரே என்பது தெளிவு.


வடமொழிக் கல்வெட்டுக்கள் - 1 (க.சங்கரநாராயணன்)
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=833

5) ஈரோடு - வஞ்சி வேள் தாழி

ஈரோடு அருகே கொல்லம்பாளையத்தில் சேரன் கோ இரவிகோதை காலத்து கல்வெட்டு ஆகும். "தென்னவன் பேரரையன் ஆன வஞ்சி வேள்" என்பவன் தான் குளம் வெட்ட பொன் கொடுத்து நிலம் வாங்கிய செய்தியும், அதற்கு தாழி ஏரி என்று பெயரிட்ட செய்தியும் பொறிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு பொறிக்கப்பட்ட காலத்தில் சேர பட்டத்தில் கோஇரவி கோதை என்னும் வீரகேரள மரபினர் ஆட்சியில் இருந்ததாக அறிகிறோம். அதே நேரம் கல்வெட்டு வஞ்சி வேள் மரபினனைப் பற்றியதாக வருவதை காண முடிகிறது. சேர மரபினர் பலர் இருந்ததும் அவர்கள் மாறி மாறி ஆதிக்கம் செலுத்திக் கொண்டும், தத்தமது பகுதிகளுக்கு உட்பட்டும் ஆட்சி நடத்தியதாக தெரியவருகிறது.

பிற்காலத்தில் கரூரை தலைமையாகக் கொண்டிருந்த அந்துவன் என்னும் வஞ்சி வேள் மரபினரின் ஆட்சி குன்றி, தாராபுரத்தில் இருந்து ஆட்சி செய்த சேரன்/சேரலர் என்னும் வீரகேரள மரபினர் ஆதிக்கம் பெருகியதாக அறிய முடிகிறது.


6) நன்னனூர் - அதிராஜராஜ வஞ்சி வேள் (2 கல்வெட்டுகள்)

நன்னனூர் என்பது சங்க கால நன்னன் எனும் வேளிர் மன்னன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக அவன் பெயரில் அமைந்த ஊர் என அறியப்படுகிறது. தற்காலத்தில் இவ்வூர் ஆனைமலை எனும் பகுதியாக அறியப்படுகிறது.

அதிராஜராஜன் என்பது சேரனின் விருதுப் பெயர் என்பது ஆய்வறிஞர் கருத்து. அதனடிப்படையில் சேர நாடான கொங்கு மண்டலம் அதிராஜராஜ மண்டலம் என்றும் சேரனை வென்ற சோழன் எனும் பெயரில் கேரளாந்தக வளநாடு என்றும் பெயர் பெற்றது. பிற்பாடு வீரசோழ மண்டலம் என்றும் அறியலானது.

கீழ்வரும் இருகல்வெட்டும் அதிராஜராஜ தேவன் என்னும் சோழருக்கு அடங்கிய வீரகேரளர் ஆட்சிக் காலத்தது. ஆளுடையார் நக்காண்டார் எனும் பெயர் அமைந்த சோமேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ளன.

கல்வெட்டு-1:

  • கோயிலின் தெற்கு ஜகதியில் பொறிக்கப்பட்டுள்ளது.
  • வட்டமணியன் வஞ்சி வேள் கல்வெட்டு
வட்டமணியனான அதிராஜராஜ வஞ்சிவேளான் என்பவனின் மனைவியும், வெள்ளாளரில் பூதந்தை கோத்திரத்து மணியம் அரையனான ராஜராஜ வல்லவரையன் என்பவனும் நந்தா விளக்கு எரிக்க கழஞ்சு என்னும் பொற்காசுகள் 10 கொடை அளித்த செய்தியை விவரிக்கிறது.




தமிழ்நாடு தொல்லியல் துறை - கோவை மாவட்டக் கல்வெட்டுக்கள்

கல்வெட்டு - 2:
  • கோயிலின் வடக்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது
  • காணிச்சேரி விழுப்பரையன் வஞ்சிவேள் கல்வெட்டு
காணிச்சேரி விழுப்பரையன் என்னும் அதிராஜராஜ வஞ்சிவேள் என்பவனின் மனைவி திருக்கோவிலில் நந்தா விளக்கு எரிக்க பொற்காசுகள் கொடுத்த செய்தி பற்றியது.


Epigraphia India A.R. No. 214 of 1927-1928

குறிப்பு: இவ்விரு கல்வெட்டுச் செய்திகள் ஒன்று போல் தான் இருக்கிறது.

ஆனால் முன்னதில் தமிழ்நாடு தொல்லியல் துறை தெற்கு ஜகதி என்றும், பின்னதில் மத்திய தொல்லியல் துறை வடக்கு சுவர் என்றும் பதித்துள்ளமை கொண்டு இரண்டு கல்வெட்டாக கொள்ளப்படுகிறது.

மேலும் வஞ்சி வேளை 'வட்டமணியன்' என்று முதல் கல்வெட்டிலும், 'விழுப்பரையன்' என இரண்டாம் கல்வெட்டிலும் வரும் நுணுக்கமான வேறுபாடும் கணக்கில் கொள்ளப்பட்டது.

புலவர் இராசு இவ்விரு செய்தியையும் கலந்தாற் போல, கல்வெட்டுப் படி கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டு பூச்சந்தை கோத்திர கொங்க வேளாளர் கல்வெட்டுகளின் கீழ் இக்கல்வெட்டை கீழ்வருமாறு பதிவு செய்துள்ளார்.




கொங்கு வேளாளர் கல்வெட்டுகள் - புலவர் செ.இராசு

7) கரூர் - வஞ்சி வேள் அந்துவன்

இது கொங்குச் சோழன் வீரராசேந்திரன் காலத்தில் கொங்க வேளாளரில் அந்துவன் கோத்திரத்தார் பற்றிய செய்தி சொல்லும் கல்வெட்டு ஆகும். தற்காலத்தில் மலைக்கோவிலூர் என்று அறியப்படும் மகாபலேஸ்வரர் திருக்கோவிலில் இக்கல்வெட்டு அமைந்திருக்கிறது.

வீரசோழ மண்டலம் என அழைக்கப்பட்ட கொங்கு மண்டலத்தில் வெங்கால நாட்டில் பழநாகம்பள்ளி எனும் ஊரில் வசிக்கும் வெள்ளாளரில் அந்துவரில் பெருக்கன் வஞ்சி வேளான் ஆன பெற்றான் என்பவரின் கோயிற் திருப்பணி குறித்த செய்தியை குறிப்பிடுகிறது.

இது வரை வஞ்சி வேள் என பல கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டிருந்தாலும் அது இன்னார் தான் என ஐயம் திரிபற குறிப்பிடும் கல்வெட்டு இதுவே ஆகும். அதுவும் சங்க கால மன்னன் அந்துவன் சேரல் மன்னனின் பெயரில் அமைந்த கோத்திர பெயரும், அவர்களின் தலைநகரான கரூரிலேயே கிடைத்திருப்பதும், இப்பகுதியில் அந்துவன் கோத்திரத்தாரே மிகுந்திருப்பதும், இக்கோயில் தர்மகர்த்தர்களாக அந்துவர்களே இன்றளவும் விளங்கிவருவதும் அதிமுக்கியமான குறிப்புகளாகும்.


கொங்கு வேளாளர் கல்வெட்டுகள் - புலவர் செ.இராசு

8) கீரனூர் - இஞ்சி வேள்

இக்கல்வெட்டு கொங்குச் சோழன் வீரராசேந்திரன் காலத்தில் காங்கேயம் வட்டம் கீரனூரில் அமைந்திருக்கும் ஆதிநாதேஸ்வரர் திருக்கோவிலில் பொறிக்கப்பட்டது. இது கரூர் வஞ்சி வேள் கல்வெட்டுக்கு சமகாலத்தது ஆகும். கொங்க வெள்ளாளரில் அந்துவரில் - இளைய செல்ல நாயன் எனும் இஞ்சி வேளான் தூண் கொடையளித்த செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.

அந்துவர்களின் முதன்மைக் காணி நாகம்பள்ளி என்றும் இரண்டாவது காணி கீரனூரும் ஆகும்.



கொங்கு வேளாளர் கல்வெட்டுகள் - புலவர் செ.இராசு


கீரனூர் பற்றி இலக்கியங்களில் பெற்றான் மகன் செல்லப்பன்.

வஞ்சி வேள் கல்வெட்டு பெற்றானைக் குறிப்பதாகவும், இஞ்சி வேள் கல்வெட்டு அவர் மகன் இளைய செல்ல நாயனை குறிப்பதாகவும்.. கீரனூர் பற்றிக் கூறும் பிற இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம்.

இப்பாடலில் அந்துவரில் காணிகளான நாகம்பள்ளி, கீரனூர், மோடமங்கலம் ஆகியவை குறிக்கப்படுகிறது. மூன்று காணிகளிலும் மூவேந்தர்க்கு எல்லை பிரித்துக் கொடுத்த செல்லாண்டி அம்மன் தான் குலதெய்வமாக விளங்குகிறாள்.

9) கொங்கூர் (தாராபுரம்) - வஞ்சிவேள்

இக்கல்வெட்டு கொங்குச் சோழன் வீர ராசேந்திரன் காலத்தில் கொங்கூர் என அழைக்கப்பட்ட தாராபுரத்தில் பசுபதீஸ்வரர் கோயிலில் அமைந்த கல்வெட்டு ஆகும். "பெரியான் காவன் ஆன வஞ்சி வேளானேன்" என்பவரைக் குறிக்கிறது. கல்வெட்டு வரிகள் தொடர்ச்சியாக இல்லை என்பது குறிப்பு.

10) கடற்றூர் - மன்றாடி வஞ்சி வேள்

இக்கல்வெட்டு கொங்குச் சோழன் மூன்றாம் விக்கிரம சோழன் காலத்தில் கடற்றூர்(தற்சமயம் உடுமலைப்பேட்டை) எனும் ஊரில் மருதீசர் கோயிலில் அமையப்பெற்றுள்ளது. கடற்றூரின் "மன்றாடி - வஞ்சி வேளான்" என்பவர் திருக்கோயிலிற்கு தூண் கொடையாக அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது.








புதன், 29 ஜூன், 2022

கொங்கு மண்டல சதகம் கூறும் அந்துவர் பெருமை!

கொங்கு மண்டல சதகம் கூறும் அந்துவர் பெருமை!

தமிழில் நூறு பாடல்களைக் கொண்டு பாடப் பெறும் இலக்கியம் 'சதகம்' எனப்படும். இவ்வகைச் சதக இலக்கியங்கள் தமிழகத்தின் வரலாற்றை அதன் பிரதான மண்டலங்களின் பெயர்களில் இயற்றப்பெற்று கிடைப்பது மிகச் சிறப்பாகும். இந்த வகை சதகங்கள் அந்தந்த மண்டலங்களின் அரசர்கள், அவரின் தசாங்கங்கள், ஆட்சிப்பிரிவுகள், வேளிர்கள், வள்ளல்கள், குடிகள், புகழ்பெற்ற புலவர்கள், தலங்கள், தெய்வத் திருவிளையாடல்கள், பெருமை தரும் நிகழ்வுகள் என புராணம்-இதிகாசம்-வாய்மொழிக் கதைகள் எல்லாம் ஒன்றுசேர நமக்கு வரலாற்றினைத் தருகின்றன.

கார்மண்டல சதகம், கொங்கு மண்டல சதகம், பாண்டி மண்டல சதகம், சோழ மண்டல சதகம், தொண்டை மண்டல சதகம் என தமிழகத்தின் பிரதான மண்டலங்களின் சதகங்கள் இன்று நமக்கு அச்சில் கிடைக்கின்றன. இவற்றில் கொங்கு மண்டல சதகம் இயற்றியோர் மூவர் ஆவர். வாலசுந்தரக்கவிஞர், கார்மேகக் கோனார், கம்பநாதசாமி ஆகிய புலவர் மூவரும் மூன்று நூல்கள் என கொங்கின் பெருமைகளை தாங்கிய 300 பாடல்கள் நமக்கு கிடைப்பது பெரும்பாக்கியம் ஆகும். இவற்றின் காலம் முறையே 7, 13, 17 என கூறப்பட்டுள்ளது ஆய்விற்குரியது.

வேளாளர்கள் 18 குடிகளையும் 'விரும்பி ஓம்புவதால்' வேளாளர் எனப்பட்டனர். அத்தகைய ஓம்புதலுக்கு ஆதாரமாக நின்றது உழவு. காடு கொன்று நாடாக்கி குளம் தொட்டு வளம் பெருக்கி கோயில் கட்டிக் குடிபுகுந்து வேளாளர்கள் தலைமை தாங்கி நடைபெறுவதாகவே ஊராட்சிகளும், நீதி வழங்கலும் அரசர்களால் நடைமுறைப் படுத்தப்பட்டது. நாடாக்குதல் எனும் செயல்முறையே வேளாளர் குடியேற்றத்தைக் குறிப்பதாகும். ராஜியங்கள் மாறினாலும் தர்மம் சிதையாமல் இருக்க பாரம்பரியமாக தர்ம பரிபாலனம் தொடர்ந்து வரும்படிக்கு வேளாளர்களைக் கொண்டு சித்திரமேழி நாட்டார் எனும் நாட்டாட்சி முறையை தமிழகத்தில் மூவேந்தர்களும் சேர்ந்து நிலைநாட்டியிருந்தனர். அத்தகைய பார்வையோடு மண்டலங்கள் எனும் இந்த நாடுகளின் பெருமையிலும் வேளாளர் பெருமைகள் வெகுவாறு பாராட்டப்பெற்றுள்ளது.

கொங்கு நாட்டின் வேளாளர் குடிகளில் தமக்கான தனிச்சிறப்பு மிக்கதோர் வரலாற்றினை உடையவர்கள் அந்துவர்கள். அந்துவர்களைப் பற்றி மூன்று பாடல்கள் கொங்கு மண்டல சதகங்களில் கிடைக்கின்றன. மூன்றுமே மிகச் சிறப்பான வரலாற்று அடிப்படையினை உடையது. சதகம் கூறும் நேர் பொருளும், அவை காட்டும் ஆய்வு நோக்கையும் இக்கட்டுறையில் விரிவாகக் காணலாம்.

பாடல்-1:

சுந்தரன் பாடல் தமிழ்தனைக் கேட்டவர் தூது சென்று
புந்தியி லெண்ணி மகிழ்ந்தவர் கூறவும் பொய்யென்றதை
சந்தேகந்தீர வயிற்றையும் பீறித்தன் நாவரிந்து
வந்தது மந்துவ கோத்திரம் வாழ்கொங்கு மண்டலமே

- கம்பநாத சாமிகள் (கொங்கு மண்டல சதகம் -  20)

https://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=244
https://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=276  

சைவக் குரவர் நால்வருள் ஒருவரான சிவபெருமானின் தோழர் என அழைக்கப்பெறும் சுந்தரமூர்த்தி நாயனாரின் பாடலைக் கேட்ட ஈசன் அவரது காதல் துயரது நீக்க அவர் மனைவியிடம் திருவாரூர் தெருவினில் நடந்தே தூது சென்றாராம். இக்கதையை தம் புத்தியினுள் எண்ணி மகிழ்ந்து கூறவும், இல்லை அது பொய் என்று மற்றொருவர் கூறவும், தான் அது உண்மையென்றே உறுதி செய்யும் பொருட்டு தன் வயிற்றையும் பீறி, நாவையும் அரிந்து வந்த அந்துவன் கோத்திரத்தவர் வாழ்வது கொங்கு மண்டலமாம்! இது அந்துவன் கூட்டத்தாரின் வாய்மைக்கு சான்றாக விளங்கும் பாடல்களில் ஒன்றாகும். 

பாடல்-2:

அற்றது பொருதப் பாடி யவ்வைக் கடிமையென்று
பெற்றவன் கீர்த்தி கங்கா குலயோகப் பிரபலனாம்
முத்தமிழ் வாணர்க்கு வேண பவுசுமின் பாய்க் கொடுத்து
வைத்தவன் அந்துவ கோத்திரத் தோன்கொங்கு மண்டலமே

- கம்பநாத சாமிகள் (கொங்கு மண்டல சதகம் -  84) 

அறுந்த பழம் மீண்டும் பொருந்தும் படியாக தன் தமிழ்த்திறத்தை வெளிப்படுத்திய அவ்வைக்கு அடிமை என்று பெற்ற புகழும், உயர் கங்கை குலம் அடைந்த யோகத்தால் விளைந்த பிரபலனும், முத்தமிழ் புலவர்கள் வேண்டும் பரிசுகள் பலவும் இன்பம் அளிக்கும் வகையில் கொடுத்து வைத்தவனும் ஆகிய அந்துவன் கோத்திரன் வாழ்வது கொங்கு மண்டலமாம்! இது அந்துவன் கூட்டத்தாரின் தமிழ்ப் பற்றும், பாவலரை புரக்கும் வள்ளாண்மையையும் விளக்கும் பாடலாகும். 

பாடல்-3:

அற்றது கூடவுஞ் சுந்தரர் பாடற் கடிமையேன்றே
பெற்றவன் பெற்றவன் பெற்றவன் காண்பிர வேசிதன்னை
முத்தமிழ் வாணற்கு வேளூர ரப்பர்முன் பாய்க்கொடுத்து
வைத்தது மந்துவன் பெத்தான் வளர்கொங்கு மண்டலமே.

- வாலசுந்தரக் கவிராயர் (கொங்கு மண்டல சதகம் -  84)
https://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=194 

இப்பாடல் சுந்தர மூர்த்தி நாயனாரின் தேவாரப் பாடல்களுக்கு அடிமையென்று தன்னை அறிவித்துக் கொண்ட அந்துவன் கோத்திரத்தைச் சேர்ந்த பெத்தான் என்பவர் விலை மாது ஒருத்தியை வேளூரர் அப்பர் (?) முன்பாக தமிழ் புலவர்கள் வேண்டவும் அவர்களுக்கு உடனே கொடுத்தார் என்பது செய்தி. இது சிவனடியார்களுக்கும் தமிழ் புலவர்களுக்கும் கேட்டதை அளிக்கும் நெறியாளர்களாகவும் புரவலர்களாகவும் விளங்கியவர்கள் அந்துவன் கூட்டத்தார் என்று எடுத்தியம்பும் பாடலாகும்.

ஆய்வுக் கோணங்கள்:

------------------------ *******[சேர்க்கப்படும்]******** --------------------------------------

சனி, 23 அக்டோபர், 2021

கொடுமணல் - அந்துவன் ஆதன்

பாரதத்தின் பழழையான கல்வெட்டில் அந்துவன் என்கிற பெயர் பயின்று வந்துள்ளதை - ஆநிரை கொள்ளும் பூசலில் இறந்துபட்ட வீரனுக்கான நடுகல் பொறிப்பில்  'அதியன் அந்துவன்' என்கிற பெயர் பயின்று வந்துள்ளமை கொண்டு கண்டோம்.

அவ்வாய்வினோடு ஒத்த சிறப்புடையதாகவும் நமக்கு இன்னும் நெருக்கமானதாகவும் மற்றுமொரு தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்பு கொங்கு நாட்டில் கிடைத்துள்ளது. 'அந்துவன்' என்கிற நமது குடிப் பெயர் அதில் பயின்று வந்துள்ளது என்பது நமக்கு நம் பழமையை பறைசாற்றும் பெருமைக்குரிய செய்தியாகும்.

கீழடி, ஆதிச்சநல்லூர் எல்லாம் ஊடகங்களில் பிரபலமாகும் முன்னரே மிக அமைதியாக தன் முத்திரையை பதித்த தொல் ஆய்வுக்களம் கொடுமணல்.  அமராவதி, காவிரி, வைகை என்னும் ஆற்றுவெளி நாகரிகங்களுக்கு இணையானது நொய்யல் ஆற்றுவெளி நாகரிகம். கொங்கு நாட்டின் சிறப்பை பழமையை பறைசாற்றும் களம் கொடுமணல் என்பது ஆய்வாளர் நிறுவிய கருத்து.

உலகத்திலேயே மிகவும் பழமையான 2500 ஆண்டுகளுக்கும் மேலான எஃகு ஆயுதக் கலங்கள் உற்பத்தி செய்து கொடுத்த அதிநவீன அமைப்புகளின் எச்சங்களை இன்றும் கொடுமணலில் காணலாம். இப்பகுதியில் பல பழமையான தொல்பொருள்கள் கிடைத்துள்ளன. இந்தியாவிலேயே மிக அதிகமாக இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட கிரேக்க ரோமாணியக் காசுகள் கிடைக்கும் ஒரே இடம், இரத்தினமணிகள், எஃகு ஆயுதங்கள், செப்புச் சிலைகள், ஒப்பனை வளையல்கள், பாசிகள், சிப்பி, கிளிஞ்சல்கள், பானைகள், ஈமச் சின்னங்கள் அதிகம் கிடைத்துள்ளது இந்த நொய்யல் ஆற்றங்கரைப் பகுதியில் தான். மேற்குலக நாடுகளோடு கடல்வழி வாணிபத்தில் தொடர்பில் இருந்த தென்னகத்தின் பிரதானமான வணிக நகரங்கள் நொய்யல், அமராவதி நதி வழியே கொங்கு நாட்டில் சிறந்து விளங்கி நாட்டின் வளத்தைப் பெருக்கின.

கொடுமணல் இன்றும் கொங்கு நாட்டு வேளாளர்களில் சேரன், பாண்டியன், பனங்காடன் என்னும் கோத்திரத்தார்க்கு காணியாக விளங்கும் ஊராகும். கீரனூர் மடத்தைச் சேர்ந்த நமது அந்துவன் உள்ளிட்ட ஆறுகுலத்தாரின் குலகுருக்களே இவர்களுக்கும் குல குருக்களாக விளங்கி வருகின்றனர் என்பது கொடுமணலுக்கு முடிச்சுப் போடும் சிறு இழை.

கொடுமணலில் பழந்தமிழ் பொறிப்புகளோடு கூடிய பல்வேறு பானை ஓடுகள் உடைந்த நிலையில் கிடைத்துள்ளன. அவற்றில் அக்கால மக்களின் பெயர்கள் பல பொறிக்கப்பட்டுள்ளன. இதில் வரலாற்றுச் சிறப்புக்குரிய விஷயம் கொங்கு வேளாளர்களில் பெரும்பான்மையான கூட்டம் என்னும் கோத்திரம்/குடிப் பெயர்கள் இப்பானை ஓடுகளில் பயின்று வந்துள்ளது தான்.

பெயருக்கு முன் ஊர்ப் பெயரும், தந்தை பெயர் அல்லது குடியின் பெயரைச் சேர்த்தும், தொடர்ந்து தன் இயற் பெயரும், பெயருக்குப் பின் தன் சிறப்புப் பட்டப் பெயர்களைச் சேர்த்தும் குறித்துக் கொள்வது பழந்தமிழர் வழக்கமாகும்.

ஆதன்‌, அந்துவன்‌, சாத்தந்தை, பண்ணன்‌, மணியன்‌, வண்ணக்கன்‌ என்ற பெயர்கள் கொடுமணல் பானை ஓடுகளில் காணப்படுகின்றன. இவை கொங்கு வேளாளர்களின் கூட்டப் பெயர்கள் ஆகும். இத்தகைய பழமையான சங்க கால தமிழ்ப் பெயர்களைக் தமது குடிப் பெயராகக் கொண்டிருக்கும் ஒரு பழந்தமிழ்ச் சமூகம் கொங்கு வேளாளர் சமூகம் என்பதற்கு இவை சான்றாகும்.

அவ்வகையில் இப்பானைப் பொறிப்புகளில் பலவும் இரண்டு பெயர்களாக குடிப் பெயரும் - இயற்பெயரும் என்ற அமைப்பில் வந்துள்ளது நோக்கலாம். அதில் ஒன்று தான் "அந்துவன் ஆதன்" எனப் பயின்று வந்துள்ள இப்பானையோட்டுப் பொறிப்பு. இதன் காலம் இற்றைக்கு 2500 ஆண்டு காலம் முந்தியது.

மூலம் : பண்டைக் குறியீடுகளும் எழுத்துகளும் - கா.ராஜன் - பக்கம் 17
படம் : கொடுமணலில் தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புகள்
- https://www.kngac.ac.in/elearning-portal/ec/admin/contents/3_18K5TELT1_2020101607104197.pdf

அந்துவன் என்ற குடியில் வந்த ஆதன் என்பவரையோ, அந்துவன் என்ற தந்தையின் மகனான ஆதன் என்பவரையோ இப்பொறிப்பு சுட்டுகிறது.

'அந்துவன் சேரல்'  (கரூர் வஞ்சி நகரை ஆண்ட சங்ககால 'இரும்பொறை' என்னும் சேர அரச பரம்பரை முதல்வன்)

'அந்துவன் சாத்தன்' (ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் ஐந்து நண்பர்களில் ஒருவராகவும் அமைச்சராகவும் விளங்கியவர்)

'அந்துவன் கீரன்' (சங்க காலக் குறுநிலமன்னன்)

'அந்துவன் செள்ளை' (இளஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னனின் தாய்)

'அந்துவன் பெற்றான்' (கொங்கு மண்டல சதகம் சொல்லும் அந்துவன் குல கொங்க வேளாளர்)

- என்கிற பெயர் பிரயோகங்களோடு இது ஒப்பிடத்தக்கது சிறப்புக்குரியதாகும்.

அந்துவன் செல்லும் இடமெல்லாம் அரசாள்வான் என்ற நம் குலப் பெண்கள் பெற்ற வரமும், நமது குலதெய்வமான செல்லாண்டியம்மன் தெய்வீக அருளும், உமையொருபாகனின் சித்தமும் இப்பெருமைகளை பேணும் வகையில் நம்மை அன்றும், இன்றும் போல என்றும் நல்வழிநடத்தி ஆள வேண்டுகிறேன். சிவ சிவா!

- அந்துவன் தனேஷ்



செவ்வாய், 20 ஜூலை, 2021

அந்துவன் மகாதேவி

சேரர் வரலாற்றில் அவர்களது தலைநகரம் எது? அவர்கள் எத்தனை கிளையினர்? அவர்களின் வழித்தோன்றல்கள் யார்? என்ற கேள்விகள் எழாத ஆய்வாளர்களே இருக்க முடியாது.

இன்று கொங்கு மண்டலம் என அறியப்படும் மேற்கு தமிழகமே சேரனின் நாடு தான். கொங்கன் என்றும், கொல்லிப் பொறையன் என்றும், அமரவாதி என்னும் ஆண்பொருநை ஆற்றுக்கு உரியவன் என்றும் அறியப்படுபவர்கள் சேரர்கள் என்பதால் சேரனின் மையமாக விளங்கியதே கொங்கு நாடு தான் என்பது விளங்கும்.

வஞ்சி நகரம் நான்கு என்று கொங்கு நாட்டு ஆவணங்கள் கூறுகின்றன. அவற்றில் இந்த அமராவதி ஆற்றங் கரையில் தான் கரூவூர், தாராபுரம், மூலனூர் என்ற மூன்று வஞ்சி நகரங்கள் இருக்கின்றன.

சேரன்/சேரலன், அந்துவன், ஆதன், மலையன், பவளன், வில்லி, ஆந்தை, பனையன் என்கிற கொங்கு நாட்டு வேளாளர்களின் கோத்திரங்கள் சேர அரச வரலாற்றில் நெருங்கிய தொடர்புடைய கோத்திரங்கள் ஆகும்.

கம்பர் காலத்தில் குலோத்துங்கனோடு ஏற்பட்ட முரண்பாட்டால் வேளாளர்கள் கொங்கிற்குள் குடியேறும் முன்னரும் இங்கு வேளாளர்கள் இருந்தார்கள் என்பதற்கு சேரர் மரபினோடு வந்த இக்கோத்திரத்தாரும் அவர்களின் வரலாறுகளுமே சான்றாதாரமமாக விளங்குகின்றன.

இவர்களில் அந்துவன் கூட்டத்தினர் பழம் வஞ்சியான கரூர் பகுதியில் காணியாளர்களாக இன்றும் பெருவாரியாக வாழ்ந்து வருகின்றனர். "வஞ்சி வேள்" என்னும் பட்டம் கொண்டிருக்கும் இவர்கள் அந்துவஞ்சேரல் என்பானின் வழியினரே என்பதைப் பலவழிகளிலும் காட்டுகிறது.

கரூர் "தென்னவன் வஞ்சி வேளான  இரவி குவாவன்", ஈரோடு கொல்லம்பாளையாம் "தென்னவன் பேரரையனான வஞ்சி வேள் தாழி" என்னும் கல்வெட்டுகளால் இவர்கள் ஒன்பதாம் நூற்றாண்டு அளவில் வீரகேரளரின்(சேரன் கூட்டத்தார்) சமகாலத்தில் கரூரைத் தலைமையாகக் கொண்டு தனி அரசாக விளங்கி வந்துள்ளனர் என்பது விளங்கும்.

மேலும் இவர்களை "வஞ்சி வ்ருஷ்ணி" என்று சம்ஸ்கிருத க்ரந்தப் பகுதியில் குறிப்பிட்டிருப்பது மிகச் சிறப்பானதொரு வரலாற்றுக் குறிப்பாகும்.

தற்சமயம் நமக்கு கிடைத்திருக்கும் மற்றுமொரு சிறப்பானதொரு கல்வெட்டுக் குறிப்பைப் பற்றியதே இப்பதிவு.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிப் பகுதியில், மணமேல்குடி என்னும் ஊரில் பொ.ஆ. 1210 , குலசேகர பாண்டியன் ஆட்சியில் பொறிக்கப்பட்டதாகக் கிடைத்திருக்கும் இக்கல்வெட்டில் புதிய தகவல் ஒன்றும் கிடைத்துள்ளது.

நானாதேசி விண்ணகர் தெற்கு மற்றும் வடக்கு மணமேல்க்குடி நகரத்தாரும் - "அந்துவன் மகாதேவி" சதுர்வேதிமங்கலத்துச் சபையோரும் சேர்ந்து மணமேல்குடி பொன்னகர் பெருமாள் கோயிலிற்காக அளித்த கொடை பற்றிய செய்தியை கல்வெட்டு விளம்புகிறது.


"அந்துவன் மகாதேவி" எனும் அரசியாரின் பெயரில் இக்கல்வெட்டின் காலத்திற்கு பலகாலம் முன்னரே இந்த சதுர்வேதிமங்கலம் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்திருக்க வேண்டும். உருவாக்கியோரின் காலமும், யார் ஆட்சியில் உருவாக்கப்பட்டது என்பதும் நமக்கு அறிய கிடைக்கவில்லை.

அரசியாரின் பெயரில் உள்ள "அந்துவன்" என்கிற முன்னொட்டு அவர் சேர அரச வம்சமான அந்துவர் வழியில் உதித்தவள் என்பதாகவோ, அல்லது சேர அரசர் வழிவந்த அந்துவன் கோத்திர அரசனொருவனுக்கு வாக்கப்பட்டதாகவோ குறித்திருக்கலாம்.

இதே போல, சங்க காலத்தில் மையூர் கிழான் மகள் "அந்துவன் செள்ளை" என்பவரும் குறிக்கப்பட்டுள்ளது அறியக் கிடைக்கிறோம். இவர் குட்டுவன் இரும்பொறையின் மனைவியாரும் இளஞ்சேரல் இரும்பொறையின் தாயாரும் ஆவார் என்பதும் அறிவோம். அவரது பெயருக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் அந்துவனின் தாய் என்பதாகக் குறிப்பதே பல்லாற்றானும் பொருத்தமாகவுள்ளது. 

இந்த இரும்பொறை வம்சம் யார் என்று கேட்டால் - வஞ்சி முற்றத்துத் துஞ்சிய நெடுநுண் கேள்வி "அந்துவஞ்சேரல் இரும்பொறை" மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன் மகன் பெருஞ்சேரல் இரும்பொறை மகன் இளஞ்சேரல் இரும்பொறை, இவர்களோடு மாந்தரஞ்சேரல் இரும்பொறை என விரிகிறது. இது பற்றி தனி பதிவாகப் பார்ப்பாம்.

ஆக "அந்துவன் மகாதேவி" என்னும் நமது நமது அரசியாரின் புகழ் சொல்லும் பெயர் அமைந்த மணமேல்குடி கல்வெட்டு கொங்கு வெள்ளாள வஞ்சி வேளார் வழி வந்த அந்துவன் கூட்டத்தார் ஒவ்வொருவருக்கும் தம் நெடிய அரச பாரம்பரியத்தை நினைவுறுத்தும் மற்றுமொரு சிறப்பாக என்றென்றும் அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை!

- அந்துவன் தனெஷ்

#கொங்கர் #அந்துவர் #வஞ்சிவேளிர் #வஞ்சிவ்ருஷ்ணி #வேளாளர் #அந்துவஞ்சேரல் #அந்துவன்செள்ளை #அந்துவன்மகாதேவி

திங்கள், 1 பிப்ரவரி, 2021

வஞ்சி வேள் - அந்துவன்! பதிவு #2 - “வஞ்சி வ்ருஷ்ணி எனும் வஞ்சி வேள்”

தென்னகத்தை ஆண்ட மூன்று பெரும் வேந்தர்கள் சேரர், சோழர், பாண்டியர். இமயத்தில் முதன் முதலில் தமது அரசு சின்னமான வில்லைப் பொறித்த பெருமைக்கும் குமரி முதல் இமயம் வரை ஒரு மொழி வைத்து பாரதத்தை ஆண்ட சிறப்புக்கும் உரியவர்கள் சேரர்கள்.

சேர அரசர்கள் பல கிளையினர் என்றும் அவர்களில் இருபெரும் கிளையினரில் மேலை மலை நாட்டை ஆண்ட சேரர்கள் உதியன் மரபினர் என்றும்  கீழைக் கொங்கு நாட்டை ஆண்ட சேரர்கள் அந்துவன் மரபினர் என்றும் அறிஞர் கூறுவர்.

உதியன் மரபினர் வீரகேரளர் என்றும் அந்துவன் மரபினர் இரும்பொறையர், வஞ்சி வேளிர் என்றும் அறியப்படலாயினர். தற்காலத்தில் இவ்வீரகேரள மரபினர் சேரன்/சேரலன் கூட்டம் என்றும் பொறையர்/வஞ்சி வேளிர் மரபினர் அந்துவன் கூட்டம் என்றும் காணியாளராகி குடி பெருகி கொங்க வேளாளரில் தனிக் கோத்திரங்களாக விளங்கி வருகின்றனர்.

இதுவரை ‘வஞ்சி வேள்’ என்னும் பட்டம் கொண்ட இச்சேர மரபினரின் கல்வெட்டுகள் பல தமிழகத்தில் கிடைத்துள்ளன. அவற்றுள் கொங்கராகிய சேரர்களின் தலைநகரிலேயே கிடைக்கப்பட்ட கல்வெட்டுகள் மிகவும் முக்கியமானது.

பதிவு #1 -இல் (https://andhuvan.blogspot.com/2019/12/blog-post.html) கொடும்பாளூர் இருக்கு வேள் மரபினர் வீழ்த்திய வஞ்சி வேள் என்ற சேர அரசனைபற்றியும் கொங்க வேளாள வஞ்சி வேள் அந்துவர் மரபினையும் பற்றிய இரு கல்வெட்டுக்களைப் பார்த்தோம்.

இந்த வஞ்சி வேளிர் பெருமை பற்றி சொல்லும் மற்றொரு முக்கியமான கல்வெட்டு பற்றிய பதிவு இது!

கல்வெட்டின் காலம்: 9 ஆம் நூற்றாண்டு

அரசன்: தென்னவன் வஞ்சி வேள் இரவி குவாவன் (சேரன்)

கல்வெட்டு:

“ஸ்ரீ தென்னவன் வஞ்சி வேளாஇன-

இரவி குவாவன் மணவாட்டி

நிறந்தேவி வஞ்சி வேளார்க்கேய்

ஐம்பது பொன் குடுத்துப் பு-

துப் பெருவாய்க் கீழக்குடையூர் மு-

ருகத்தரைக் கடறு சாற்றிய காற்செய்யு-

ம் விலைக்குக் கொண்டிவ்வூர்த் திருமூ-

லட்டானத்து மாதேவர்க்கு ஒரு நொந்தாவி-

ளக்கினுக்கும் திருவமிர்தினுக்குமாகக் கு-

டுத்தாள் நிறந்தேவி பந்மாஹேஸ்வர காவல்

பாத3 நிவர்த்தநஸ்யாதா3 ச்ச2 த்ரக்3 ரா மே பி

நாகிநே வஞ்சிவ்ரிஷ்ணேகு3 ஹா4 ப4 ஸ்ய தே3-

வி தே3வீதி கீர்த்திதா ஸ்வஸ்தி”

விளக்கம்:

கருவூரில் கீழக்குடையூர் என்னும் ஊரின் திருமூலட்டானத்து மகாதேவர்க்கு நந்தா விளக்கு எரிக்கவும், திருஅமுது படைக்கவும் வஞ்சி வேளின் மனைவி நிறந்தேவியார் விலைக்கு நிலம் வாங்கிக் கொடுத்த செய்தியைக் கூறுகிறது இக்கல்வெட்டு.

துணை: ஆவணம் இதழ்-18, 2007, பகுதி 11-4, பக்கம் 31-32

கல்வெட்டின் சிறப்பு:

கல்வெட்டு தமிழ் மற்றும் சம்ஸ்கிருதத்தில் இருமொழிக் கல்வெட்டாய் அமைந்திருப்பது சிறப்பாகும்.

மேலும் ‘வேள்’ என்னும் தமிழ் சொல்லுக்கு இணையாக சம்ஸ்க்ருதத்தில் 'வ்ருஷ்ணி' என்று குறித்திருப்பது தனிச் சிறப்பு உடையதாகும்.

இக்குறிப்பு நமக்கு இரண்டு செய்திகளை விளக்குவதாக இருக்கலாம்.

1) ‘வ்ருஷ்ணி’ என்பதற்கு வடமொழியில் ஆண்மை மிக்கவன் என்று பொருள்படும். வேள் (ஒளிபொருந்தியவன்) என்னும் சொல்லுக்கு இணையாக இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது சரியே. அரச நிலையைக் குறிக்க இவ்விரு சொற்களும் பயன்பட்டுள்ளதாக அறியலாம்.

2) ‘வ்ருஷ்ணி’ என்பது மாயோன் ஆகிய திருமால் அவதாரம் செய்த யது குல வம்சத்தின் ஒரு கிளையின் பெயரும் ஆகும்.

துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் பதினெண்குடி வேளிரையும் அருவாளரையும் கொண்டு போந்து”

- நச்சினார்க்கினியர் (தொல்காப்பியம் பாயிர உரை)

‘‘இது மலயமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும் வேந்தன் தொழில் உரித்தென்கிறது.’’

- நச்சினார்க்கினியர் (தொல்காப்பியம், அகத்திணை 32 ஆம் சூத்திர உரை)

மேற்காட்டிய நச்சினார்க்கினியர் உரை வழி நோக்கின் ‘வ்ருஷ்ணி’ என்பது கண்ணபிரான் வழி வந்த வேளிர் வம்சம் என்ற பொருளும் தொக்கி வருவது அருஞ்சிறப்பாகும்.

இதற்கு வலு சேர்க்கும் விதம் சேரனைப் பற்றிய பழங்கதைகள் சேரனை ஆநிறைச் செல்வங்களுக்கு உரியவனாகச் சிறப்பிக்கப் படுவது உற்றுநோக்குதற்கு உரியதாகும்.

“சேர நாடு வேழம் உடைத்து”

“சோழ நாடு சோறு உடைத்து”

“பாண்டி நாடு முத்து உடைத்து”

“தொண்டை நாடு சான்றோர் உடைத்து”

என்னும் வரிசையில் “கொங்கு நாடு ஆ உடைத்து” என்று மொழிவர் சான்றோர்.

“ஆகெழு கொங்கர்” (பதிற்றுப்பத்து - 28), “கொங்கர் ஆபரந்தன்ன” (பதிற்றுப்பத்து - 77) என்னும் சங்கப் பாடல்களும் இச்சிறப்பை எடுத்து இயம்புகின்றன.

தற்காலத்திலும் கொங்க மாடுகள் / கங்க மாடுகள் என்னும் காங்கேய நாட்டு மாடுகள் உலக அளவில் தம் அழகிற்கும், வலிமைக்கும் பிரசித்தி பெற்றவை என்பது ஒப்ப நோக்கத்தக்கது.

"சோழன் பூர்வ பட்டையம்" என்னும் பழஞ்சுவடிச் செய்தி ஒருபடி மேலே போய் “இலாட வளநாட்டில் நந்தகோபால பாடியில் உலாச் சேரன் பிறந்தான்” என்று அறிவிக்கிறது.


 
புலிமான் கோம்பையில் கிடைத்த காலத்தால் பாரதத்தின் மிகப்பழமையானதும் முதன்மையாந்துமான பிராமிக் கல்வெட்டு ஆகோளில் இறந்து பட்ட “கல்பேறு அதியன் அந்துவன்”. (கல்பேறு - ஆநிரை பேறு) என்று பசுச் செல்வம் மிக்க அந்துவன் ஒருவனைக் குறிப்பதை மற்றொரு பதிவில் (https://andhuvan.blogspot.com/2020/02/blog-post.html) பார்த்தோம்.


மேலும் கோயமுத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே கடத்தூரில் மருதீசர் கோயிலில் கிடைக்கும் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய கல்வெட்டு ஒன்றும் “கடத்தூர் மன்றாடி வஞ்சி வேள்” என்பவன் தூண் செய்து அளித்தது பற்றிக் கூறுகிறது. மன்றாடி என்பது ஆநிறை ஓம்பும் சமூகத்தில் உண்டான ஆட்சி அரச பொறுப்பு என்பது அறிஞர்கள் கூற்று.




இச்செய்திகள் எல்லாம் கொங்கு நாட்டைத் தலைமையாகக் கொண்டு ஆண்ட வஞ்சி வேளிர்களான சேர மரபினர் ஆநிறைச் செல்வம் மிக்கவர்கள், கண்ண பிரான் வழிவந்த வ்ருஷ்ணி குலத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் அதன் வழியே கொங்க வேளாள அந்துவர்களின் வரலாறு மிகவும் அரியதொரு தொடர் இழையைக் கொண்டது  என்பதும் ஒருவாறு ஊர்ஜிதம் ஆகிறது.

நன்றி: ஜெய்வந்த் (ஆவணம் இதழ் சுட்டியதற்கு)

"நன்றே நம்பிக் குடிவாழ்க்கை நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா!"

- அந்துவன் தனேஷ்

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

கல் பேறு அதியன் அந்துவன் - ஓர் ஆய்வு!

பாரதத்தில் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளை எழுதப் பயன்படுத்தப்பட்ட பழமையான எழுத்து முறை பிராமி எனப்படுகிறது.  தமிழை எழுதப் பயன்படுத்தப்படும் பிராமி வடிவத்தை தமிழி என்ற பெயர் கொண்டும் அழைக்கின்றனர்.

பாரதம் நெடுக இதுவரை கிடைத்துள்ள பிராமி எழுத்துவடிவம் பொறித்த கல்வெட்டுகளில் அசோகரின் கல்வெட்டுகளே பழமையானது எனக் கருதப்பட்டு வந்தது.
இதற்கிடையே மதுரை அருகே புலிமான் கோம்பையில் கிடைத்துள்ள நடுகல்லில் இவ்வகை தமிழி பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் கிடைத்துள்ளது. ஏறக்குறைய 2400 வருடங்கள் பழமையானது இக்கல்வெட்டு என்று தற்போது கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள். 

இதுவரை இந்தியாவில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் மிகவும் பழமையானது இது என்றும் ஆய்வறிஞர்கள் கூறுகின்றனர். 


மேற்படி கல்வெட்டு வரிகள் வாசிக்கப்பட்டதில் பிழை இருப்பதை ர.பூங்குன்றன் அவர்கள் விளக்கி பின் வருமாறு வாசிக்கிறார்:

" ... கல்பேறு
அதியன் அந்துவன்
கூடலூர் ஆகோள் ... "

... ஆநிரைச் செல்வங்கள் (பெற்றம்) மிக்கவனான அதியன் குடியில் வந்த அந்துவன் என்பான் கூடலூரில் ஆநிரைகளை கவரச் செல்லும்போது.... வீர மரணம் அடைந்ததற்காக நடுகல் வைத்து வழிபட்டு இச்செய்தியைப் பொறித்துள்ளனர்.




ஏன் இது மிக முக்கியத்துவம் பெறுகிறது?


வரலாற்றில் ஒரு பெரும் வீரனின் பெயரில் கல்வெட்டுக் கிடைத்திருப்பதும், அது பாரதத்தின் மிகப் பழமையான கல்வெட்டு என்பதும், அதில் அந்துவன் என்னும் வீரன் பெயர் இடம் பெற்றுள்ளதும், அந்துவன் என்பது தமிழகத்தில் கொங்கு நாட்டில் வெள்ளாள கவுண்டரின் ஒரு கோத்திரப் பெயர் என்பது நமது பாரதத்திற்கும், தமிழர்க்கும், கொங்கர்க்கும், வெள்ளாளர்/வேளாளர்க்கும், அந்துவன் கூட்டத்தார்க்கும் பெருமை தருவதாகும்.

நமது குடிப் பெயர் (கோத்திரம்/வம்சாவளி) நமது தொன்மையை பறைசாற்றுகிறது என்றால் மிகையல்ல.

கொங்கு நாட்டில் வாழ்ந்த மக்களை "ஆகெழு கொங்கர்" , "கொங்கர் ஆ பரந்தன்ன" என்று ஆநீரைச் செல்வத்தோடு ஒப்பிட்டு இலக்கியங்கள் புகழ்கின்றன. அவர்கள் வீரத்திலும் சிறந்தவர்கள் எனும்படிக்கு "ஒளிருவாட் கொங்கர்" எனப்பட்டுள்ளனர். அந்துவன் என்னும் இக்குடிப் பெயர் கொங்க வெள்ளாளரிடையே மட்டும் வழக்கில் இருந்து வருவதாலும், இன்றும் கொங்கு நாட்டுக் ஆவினமான காங்கேயம் இனக் காளைகள் உலகப் பிரசித்திப் பெற்றவை என்பதாலும். ஆகோளில் இடம் பெற்ற அப்பெரும் வீரன் வஞ்சி வேளிரான கொங்க வெள்ளாள அந்துவரின் வம்சத்தில் வந்தவனாக இருக்க வாய்ப்பதிகம். மேலதிக ஆதாரங்கள் கிட்டின் அஃது நிறுவப்படும்.

யது குல சேரர் (எனும்) வஞ்சி வேள் அந்துவர்

௳ தமிழகத்தின் மூவேந்தர்களான சேர சோழ பாண்டியரை முறையே அக்னி வம்ச, சூரிய வம்ச, சந்திர வம்சம் என்று சொல்வதுண்டு. இதில் சேரர்களை அக்னி வம்சம் என...